Monday, July 18, 2011

நடப்பு ஆண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

Monday, July 18, 2011
கடந்த வருடம் 1 மற்றும் 6-வது வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த வருடம் மற்ற வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடை முறைப்படுத்த திட்ட மிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சமச்சீர் கல்வி பாடத் திட்டம் தரமானதாக இல்லை. எனவே, இந்த ஆண்டு அதை நடைமுறைப்படுத்த இயலாது. நிபுணர்குழுவை அமைத்து பாடத்திட்டம் ஆய்வுசெய்யப்படும் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்தது.

இந்த நிலையில், “சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும், என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உடனே சட்டசபையில் சமச்சீர் கல்வி திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது.

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. சுப்ரீம்கோர்ட்டு மனுவை விசாரித்து, தமிழ் நாட்டில் 1 மற்றும் 6-வது வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை தொடர வேண்டும். மற்ற வகுப்புகளில் நடைமுறைப் படுத்துவது குறித்து நிபுணர் குழுவின் கருத்துக்களை கேட்டு சென்னை ஐகோர்ட்டு முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கான முடிவை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

கோர்ட்டு விதித்த காலக் கெடுவுக்குள் நிபுணர்கள் அறிக்கையை தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. படிப்படியாக சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பான இருதரப்பு விவாதம் கடந்த வாரம் முடிந்தது. ஐகோர்ட்டு நீதிபதிகள் தேதி அறிவிக்காமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் சமச்சீர் கல்வி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர் தீர்ப்பு அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-

தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் இந்த ஆண்டே அமல்படுத்தப்பட வேண்டும். இதற்கு முரணாக தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்ட சட்டத்திருத்தத்தின் 3-ம் பிரிவு செல்லாது. ஒன்றாம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் ஏனைய வகுப்புகளுக்கும் இதே கல்வி திட்டம் தொடர வேண்டும். 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்திய நிலையில் மீண்டும் பழைய பாடத் திட்டத்துக்கு மாணவர்களை இழுத்து செல்வதை அனுமதிக்க முடியாது. இது ஒரு கோடியே 38 லட்சம் மாணவ-மாணவியர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும். எனவே இந்த ஆண்டே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்கான சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்களை இந்த மாதம் (ஜூலை) 22-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். தமிழக அரசு அமைத்த சமச்சீர் கல்வி ஆய்வுக்குழு பரிந்துரைப்படி ஏதேனும் பாடத் திட்டங்கள் மாற்றம் செய்ய வேண்டியதிருந்தால் அதை தெளிவுபடுத்தும் வகையில் குழு அமைத்து மாற்றம் செய்து துணை பட்டியல் இணைப்பாக தயார் செய்து 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் மதியம் 12.45 மணிக்கு தீர்ப்பை வாசிக்க தொடங்கி 1.05 மணிக்கு முடித்தனர்.

No comments:

Post a Comment