Monday, July 15, 2019

தமிழகத்தில் IS பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தும் அபாயம்?

கோவையை அடுத்து தற்போது சென்னை மற்றும் நாகையில் அடுத்தடுத்து பயங்கரவாதத் தொடர்புள்ள நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தும் அபாயம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.என்.ஐ.ஏ., வேட்டை :-இந்தியாவில் உளவுப்பிரிவினரும், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகளும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பு கோரத்தில், 259 பேர் உயிரிழந்த பின்னர் இந்திய உளவுத்துறை உஷாராகியுள்ளது. கோட்டை விட்ட இலங்கை :ஏனெனில் முன்கூட்டியே எச்சரித்தும், இலங்கை உளவுத்துறை கோட்டை விட்டதால் இலங்கை குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது.

 அதன் பின் நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில் இந்தியாவிலும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன.

இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளிடம் இந்தியாவில் உள்ள கேரளத்தின் காசர்கோடு, கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பயங்கரவாத ஆதரவாளர்கள் தொடர்பு கொண்டு பேசியிருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இலங்கை வாலிபர்?
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இலங்கை வாலிபர் ஒருவர் பிடிபட்டார். அவர் இலங்கை பயங்கரவாத குண்டு வெடிப்பு தலைவனுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இவனுடன் சென்னையில் பலர் நட்புடன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் யார்? என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டது.

வகாத் - இ- இஸ்லாமி ஹிந்த் :
இந்நிலையில் நேற்று(ஜூலை 13) சென்னை மற்றும் நாகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மண்ணடி லிங்குசெட்டி தெருவில் 'வகாத்- இ-இஸ்லாமி ஹிந்த்' என்ற அமைப்பின் அலுவலகத்தை போலீஸ் எஸ்.பி.ராகுல் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். நேற்று காலை 6 மணியில் இருந்து இரவு வரை சோதனை நடைபெற்றது.

புகாரியின் கூட்டாளிகள் :
இந்த அமைப்பின் தலைவரான சையது புகாரியின் வேப்பேரி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் செல்போன்கள், லேப்டாப்கள், பென்டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. சோதனைக்கு பிறகு சையது புகாரியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கிண்டியில் உள்ள அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். மண்ணடியில் உள்ள அலுவலகத்தில் நடந்த சோதனை யின் போது சையது புகாரியின் கூட்டாளிகள் 2 பேரும் பிடிபட்டனர்.

நீதிமன்ற காவல் :
இதனிடையே நாகையில் ஹசன்அலி யூனுஸ் மாரிக்கர், முகமது யூசுப்கான் ஹரிஸ்முகமது ஆகிய 2 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அவர்களது வீட்டிலும் லேப்டாப், செல்போன்கள், புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த 2 பேரும் கைது செய்யப்பட்டு ஜூலை 25 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலும், 3 பேர் மீதும் கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு குறி?
இந்த பயங்கரவாத தொடர்பில் உள்ளவர்கள் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக தெரியவந்துள்ளது. சென்னை, நாகையில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அடுத்தடுத்த என்.ஐ.ஏ., அதிரடிகள், தமிழகத்திற்கு பயங்கரவாதிகள் குறிவைத்திருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment