Friday, August 18, 2017

வடமாகாண சபை மீது தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் : அ.வரதராஜப் பெருமாள்!

வடமாகாண சபை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்த சபையாக செயற்பட்டு வெளிவந்திருப்பது வெட்கக் கேடானது என வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தல் காலங்களில் ஒன்றுமையுடன்
வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிக்கை விடுத்தவர்களே இன்று ஒற்றுமையின்றி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வடமாகாண சபை மீது தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடமாகாண சபை உருவாக்கும் போது எமது மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். எனினும், இன்று வடமாகாண சபை மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இவ்வாறான வடக்குமாகாண சபை தேவைதானா? என்று மக்கள் எண்ண ஆரம்பித்துள்ளனர். தேர்தல் காலங்களில் ஒன்றுமையுடன் வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிக்கை விடுத்தவர்களே இன்று ஒற்றுமையின்றி இருக்கின்றனர்.

ஒரு பெரும் யுத்த அழிவுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட வடமாகாண சபை மக்களின் விடிவுக்காக உழைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது.

வடக்கு மக்களிடத்தில் மாத்திரமின்றி உலகம் முழுவதும் வாழும் மக்கள் மத்தியில் இந்த எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், அந்த எதிர்பார்ப்பு வீணாக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு நன்மை செய்வோம் என கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த மாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்கு நன்மை ஏதும் செய்யவில்லை. அத்துடன், தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கின்றார்கள்.

வடமாகாண சபை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்த சபையாக செயற்பட்டு வெளிவந்திருப்பது வெட்கக் கேடானது. முதலமைச்சர் தன்னுடைய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார்.
அமைச்சர்கள் ஏனைய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார்கள். அவர்களுடைய கட்சியின் தலைமைக்கு எதிராக அவர்களே பிரச்சாரம் செய்கின்றார்கள்.

கட்சியின் தலைமை தன்னுடைய உறுப்பினர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றது. இவ்வாறானவர்கள் எவ்வாறு மக்களுக்கு சேவை செய்யப் போகின்றார்கள்? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

1 comment: