Thursday, March 9, 2017

இலங்கை மற்றும் இந்திய சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் பரஸ்பரம் ஒப்புதல்!

புதுடில்லி: இலங்கை மற்றும் இந்திய சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் பரஸ்பரம் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

ராமேஸ்வரம் மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இந்தியா, இலங்கை நாடுகளின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 
இதன்படி, இருநாட்டு சிறைகளில் உள்ள மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 85 பேர்
 விடுவிக்கப்பட உள்ளனர்.

கச்சத்தீவு திருவிழா: இந்திய மீனவர்களுக்கு இலங்கை அமைச்சர் அழைப்பு!

கச்சத்தீவில் நடைபெறும் ஆலய விழாவிற்கு வருகை தருமாறு இந்திய மீனவர்களுக்கு இலங்கை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை வசம் உள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் - 11, 12 ஆகிய இருநாட்கள் நடைபெறுகிறது. இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுகொல்லப்பட்டார். இதை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கச்சத்தீவு திருவிழா தொடர்பாக, இலங்கை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியதாவது:

துப்பாக்கிச்சூடு சம்பவம் கச்சத்தீவு ஆலய விழாவை எந்தவிதத்திலும் பாதிக்காது. இருநாட்டு மீனவ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியம். திருவிழாவை சிறப்பாக நடத்த இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பு தருவார்கள்.

துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என கடற்படை கூறுகிறது. பிழை ஏற்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தயாராக உள்ளது. தமிழக மீனவர் சுடப்பட்டது தொடர்பாக முழு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடக்கும் இருநாட்டு பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படும் என நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment