Friday, September 18, 2015

வைகோ அமைக்கும் கூட்டணியால் ம.தி.மு.க.,வில் கடும்... புகைச்சல்!!

Friday, September 18, 2015
சிறிய கட்சிகளுடன் இணைந்து, வைகோ அமைக்கும் கூட்டணி முயற்சியால், ம.தி.மு.க.,வில் கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. வைகோ முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

காஞ்சிபுரம், சேலம் போன்ற முக்கிய மாவட்ட செயலர்கள், தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். அவர்களுடன், ம.தி.மு.க.,வின் மகளிர் அணி செயலரும் கட்சி மாறி விட்டார். பல முக்கிய நிர்வாகிகள், ம.தி.மு.க.,வில் இருந்து வெளியேற தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் ரகசிய உத்தரவு காரணமாக, ஆள் இழுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருவதாக, ம.தி.மு.க., தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
மக்கள் நல கூட்டணி:
 
சமீபத்தில், தி.மு.க.,வுடன் நெருங்க விரும்பியதுடன், அதற்கான நடவடிக்கைகளையும், ம.தி.மு.க., எடுத்தது. 2016 சட்டசபைத் தேர்தலை, தி.மு.க.,வுடன் இணைந்து சந்திக்கவும் விரும்பியது. ஆனால், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆர்வம் காட்டாததால், அதிருப்தியில் இருந்த, ம.தி.மு.க., மக்கள் நல கூட்டணியில் இணைந்தது.

அதில் இடம் பெற்றுள்ள, கம்யூனிஸ்டுகள், வி.சி., மற்றும், ம.ம.க.,வுடன் சேர்ந்து, 'ஆட்சியில் பங்கு; அ.தி.மு.க., - தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை' என்ற முடிவை, ம.தி.மு.க., எடுத்தது. இது தொடர்பான பிரசாரத்தை, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தீவிரமாக மேற்கொண்டார். அது, அவரதுகட்சிக்குள் கடும் புகைச்சலை கிளப்பியுள்ளது.

'மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து என்ன பிரயோஜனம்; தி.மு.க.,வுடன் சேர்ந்தாலாவது நான்கு சீட் ஜெயிக்க முடியும்; மூன்றாவது அணியை உருவாக்கி, தேர்தலைச் சந்திப்பது தற்கொலைக்கு சமம்' என, கட்சியின் மூத்த நிர்வாகிகள், வைகோவிடம் முறையிட்டனர்.அதை காதில் வாங்க வைகோ மறுத்ததால், அதிருப்தி அடைந்தவர்கள், கட்சியை விட்டு வெளியேறத் துவங்கி விட்டனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்த, ம.தி.மு.க., மாநாட்டில், தேர்தல் தொடர்பான முக்கிய முடிவை அறிவிப்பதாக, வைகோ சொல்லியிருந்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே, காஞ்சிபுரம், ம.தி.மு.க., மாவட்ட செயலர் பாலவாக்கம் சோமு, தி.மு.க.,வுக்கு ஓடி விட்டார்.
சேலம் மாவட்ட செயலர் தாமரைக்கண்ணன், மாநாட்டுக்கே செல்லவில்லை. அவரும், மாநில மகளிர் அணி செயலர் விஜயகுமாரி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும், நேற்று, கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.மேலும், மதுரை புறநகர் மாவட்ட செயலர் டாக்டர் சரவணன், தி.மு.க.,வுக்கு செல்ல ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆள் இழுப்பு வேலை:
 
இதுகுறித்து, ம.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: 'ம.தி.மு.க.,வை உடைக்க, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., திட்டமிட்டு செயல்படுகின்றன' என, வைகோ குற்றம் சாட்டியிருந்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில், ம.தி.மு.க., கூடாரத்தை காலி செய்வதில், தி.மு.க., தீவிரமாகி விட்டது.
தி.மு.க.,வுடன் கூட்டு சேரப் போவதில்லை என, நாங்கள் முடிவெடுத்ததால், முக்கிய நிர்வாகிகளை இழுத்து, ம.தி.மு.க.,வை பலவீனப்படுத்தி விட எண்ணுகின்றனர். கருணாநிதி உத்தரவுப்
படியே, ஆள் இழுக்கும் வேலையை, தி.மு.க., துவங்கி உள்ளது. இவ்வாறு ம.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது...

No comments:

Post a Comment