Saturday, August 29, 2015

நடிகர் சஞ்சய் தத் வழக்கில் வந்தது திடீர் திருப்பம்!

Saturday, August 29, 2015
புதுடில்லி:'ஏ.கே., 56' துப்பாக்கியை வைத்திருந்த வழக்கில், நடிகர் சஞ்சய் தத்திற்கும், அவரின் நண்பர் யூசுப்புக்கும், பல ஆண்டுகளுக்கு முன்பே, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த குற்றத்திற்கு அதிகபட்சம், மூன்றாண்டுகள் தான் தண்டனை விதிக்க முடியும் என்பதை அறிந்து, நீதிபதிகள் நேற்று, அதிர்ச்சி அடைந்தனர்.

யூசுப் நுல்வாலா சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.சி.பந்த் ஆகியோரின் கவனத்திற்கு, வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த விவகாரத்தை கொண்டு வந்தார்.

இந்திய தண்டனைச் சட்டப்படி, ஏ.கே., 56 ரக துப்பாக்கியை சட்ட விரோதமாக வைத்திருப்பவர்களுக்கு, அதிக பட்சம் மூன்றாண்டுகள் தான் தண்டனை விதிக்க முடியும் என்பதை, முன்னரே தங்கள் கவனத்திற்கு கொண்டு வராதது குறித்து, நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். அதன் பிறகு, சிறையில் உள்ள நுல்வாலா, சீராய்வு மனு தாக்கல் செய்தால், அதை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சஞ்சய் தத்தும், யூசுப்பும், ஐந்தாண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன், சஞ்சய் தத், ஒரு மாத, 'பரோல்' எனப்படும் விடுமுறையில் வெளியே வந்துள்ளார்.

No comments:

Post a Comment