Friday, July 31, 2015

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அல்வா கொடுத்த செசன்யா நாட்டுப் பெண்கள்: 3 ஆயிரம் டாலர்களை சுரண்டி கைவரிசை!!

Friday, July 31, 2015
குரோஸ்னி:வீரர்கள் தேவை, வீராங்கணைகள் தேவை, எங்கள் வீரர்களுக்கு 'சேவை' செய்ய இளம்பெண்கள் தேவை என இணையதளம் மூலமாக ஆள்பிடிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து ரஷ்யாவின் செசன்யா நாட்டுப் பெண்கள் 3 ஆயிரத்து 300 டாலர்களை மோசடி செய்த தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களின் மூலம் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் ஆள்தேர்வு முகாம் நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், இங்கிருந்து சிலரை தேர்வு செய்து, சிரியா மற்றும் ஈராக் நாட்டுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த வலைத்தளத்தில் தங்களது பெயரை பதிவு செய்திருந்த 3 பெண்கள், ஐ.எஸ். படையில் சேர்ந்து சண்டையிட விருப்பம் தெரிவித்தனர்.

ஆனால், சிரியாவுக்கு செல்ல தங்களிடம் பணம் இல்லை, பண உதவி செய்தால் உடனடியாக சிரியாவுக்கு புறப்பட தயார் என அந்த இளம்பெண்கள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, ரகசியமாக 'ஆன்லைன் டிரான்ஸ்பர்' மூலம் இந்த மூன்று பெண்களுக்கும் தலா ஆயிரத்து நூறு அமெரிக்க டாலர்கள் விமான கட்டணமாக அனுப்பி வைக்கப்பட்டது.

3 ஆயிரத்து 300 டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 2 லட்சத்து பத்தாயிரம் ரூபாய்) பணத்தை பெற்றுக்கொண்ட அந்த 3 கைகாரிகளும் உடனடியாக தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தை இழுத்து மூடிவிட்டனர். இதைப்போன்ற முறைகேடான பணப் பரிமாற்றத்தை கண்காணித்துவந்த ரகசிய போலீசார் மூலம் இந்த தகவல் வெளியாகி, ரஷ்ய ஊடகங்களில் தற்போது தலைப்பு செய்தியாக உலா வருகிறது.

No comments:

Post a Comment