Sunday, January 25, 2015

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்; பவானி சிங் திடீர் ராஜினாமா!!

Sunday, January 25, 2015
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
 
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை முடிந்ததும் அனைவரும் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் பவானி சிங் மட்டும் வெளியே வராமல் நீண்ட நேரம் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். திமுக வழக்கறிஞர் சரவணனுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலனை அழைத்து தனது ராஜினாமா கடிதத்தை பவானிசிங் அளித் துள்ளார்.
 
அதில், ''தொடர் வேலைப்பளு காரணமாக உடல்ரீதியாக நான் மிக‌வும் பாதிக்கப்பட்டுள்ளேன். சமீபகாலமாக தேவையில்லாத‌ மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் என்னால் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நீடிக்க முடியாது. எனவே அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து இன்றுமுதல் விடுபடுகிறேன்''என குறிப்பிட் டுள்ளார்.
 
இதுதொடர்பாக சென்னையில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் ஜெயலலிதா வழக்கின் பொறுப் பாளரான வழக்கறிஞர் செந்திலிடமும் ஐஜி குணசீலன் தகவல் தெரி வித்தார்.
''வேலைப்பளு காரணமாக உடல்ரீதியாக மிக‌வும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நீடிக்க முடியாது'' என குறிப்பிட்டுள்ளார்
 
ஜெயலலிதாவின் வழக்கறிஞருடன் ரகசிய பேச்சு
 
ராஜினாமா தகவலால் அதிர்ச்சி அடைந்த செந்தில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் தனியாக பேசிக் கொண்டு இருந்தார்.
 
திமுக தரப்பு நெருக்கடிகளை பொறுக்க முடியவில்லை. சுப்பிரமணியன் சுவாமியும் டிராபிக் ராமசாமியும் என்னை நீக்க முயற்சிக்கிறார்கள். சமீபகாலமாக எனக்கு உடல்நிலையும் சரியில்லை. இவ்வளவு நெருக்கடியுடன் என்னால் அரசு வழக்கறிஞராக‌ தொடர‌ முடியாது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எனக்கு ஒரு நாளைக்கு ரூ.65 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்குகிறது. டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர்கள் என்றால் ரூ.25 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைந்த ஊதியத்தில் எப்படி பணியாற்ற முடியும் என பவானி சிங் கேள்வி எழுப்பியதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலன் உள்ளிட்டோர் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை தனிமையில் சந்தித்து அரை மணி நேரம் பேசியதாகத் தெரிகிறது.
 
அப்போது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியதாகவும் அவருக்கு போதிய ஊதிய உயர்வு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் பவானி சிங் தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
 
அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து பவானி சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் சொத்துக்குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment