Tuesday, January 27, 2015

இன்னும் மூன்று மாதங்களில் மகிந்த ராஜபக்ஷ யுகம் மீண்டும் ஏற்படுத்தப்படும்: முன்னாள் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம!

Tuesday, January 27, 2015
இலங்கை::இன்னும் மூன்று மாதங்களில் மகிந்த ராஜபக்ஷ யுகம் மீண்டும் ஏற்படுத்தப்படும் என முன்னாள் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
வந்துரம்ப பிரதேசத்தில் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார மேடை தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரை பொலிஸ் நிலையத்தில் இருந்து பலவந்தமாக அழைத்துச் சென்றதாக முன்னாள் பிரதியமைச்சர் முத்துஹெட்டிகம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது சம்பந்தமான அவருக்கு எதிரான வழக்கு இன்று பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றதுடன் விசாரணைகள் அடுத்த மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
முன்னாள் பிரதியமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவருக்கு எதிரான சாட்சியங்கள் உட்பட ஏனைய அறிக்கைகளை பொலிஸார் சரியான முறையில் நீதிமன்றத்தில் சமர்பிக்காத காரணத்தில் நீதவான் சந்திம எதிரிமான்ன வழக்கை ஒத்திவைத்தார். இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முத்துஹெட்டிகம, தான் செய்யாத தவறுக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறினார்.
 
எவ்வாறாயினும் நீதிமன்றத்தில் நியாயம் நிறைவேற்றப்படும் எனவும் தான் எதற்கும் கவலைப்படும் நபர் அல்ல எனவும் இன்னும் மூன்று மாதங்களில் மகிந்த ராஜபக்ஷ யுகம் மீண்டும் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment