Saturday, January 10, 2015

அறுபது பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டாளம் நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கும்!

Saturday, January 10, 2015
இலங்கை::அமைச்சரவை அந்தஸ்துள்ள இருபத்தைந்து அமைச்சர்கள், பத்து அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள், இருபத்தைந்து பிரதி அமைச்சர்கள் என அறுபது பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டாளம் நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கும் என இணையத்துக்கு அறியவந்தது. புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, தமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்தாலேசித்து இந்த அமைச்சர்கள் மற்றும் அமைச்சு ஒதுக்கீடுகளை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.
 
 இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் இருந்த சிலருக்கும் முக்கிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் எனத் தெரிகின்றது. வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படுவார். முன்னர் இந்தப் பதவியில் கடமையாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. புதிதாக உருவாக்கப்படும் உள்துறை அமைச்சுக்குப் பொறுப்பாக ராஜித சேனாரட்ண நியமிக்கப்படுவார் எனத்தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சு புதிய ஜனாதிபதியின் வசமே இருக்கும். புதிய அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முக்கிய பொறுப்பு ஒன்றை அளிக்க முன்வந்துள்ள புதிய அரசுத் தலைமை, ஈ.பி.டி.பி தரப்புக்கு அமைச்சரவையில் இடமளிக்காது என்றும் கூறப்பட்டது.
 
 ஜே.வி.பி. புதிய அமைச்சரவையிலோ அரசிலோ இணைந்து கொள்ளாது என்றும் தெரிகிறது. நாடாளுமன்றின் ஒவ்வொரு விடயங்களின் அடிப்படையிலும் அவற்றைப் பரிசீலித்து அவையவைக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஜே.வி.பி. தீர்மானிக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய அமைச்சரவையில் சஜித் பிரேமதாஸ, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், போன்றோருக்கும் முக்கிய
 
இடமளிக்கப்படவிருக்கின்றது. ஐ.தே.கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான திருமதி விஜயகலா மகேஸ்வரன் அல்லது தேசியப் பட்டியல் உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் ஆகிய இருவரில் யாராவது ஒருவருக்கு குறைந்த பட்சம் ஒரு பிரதி அமைச்சர் பதவியாவது வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

No comments:

Post a Comment