Tuesday, November 25, 2014

பாகிஸ்தானுடன் ரஷ்யா ராணுவ ஒப்பந்தம்: இந்திய - அமெரிக்க உறவு பலமாவதால் அதிரடி!

Tuesday, November 25, 2014
சென்னை::இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடான ரஷ்யா, பாகிஸ்தானுடன் ராணுவ ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவிற்கு தேவையான ராணுவ தடவாளங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்படுவது அதிகரித்துள்ளதால், ஆசிய கண்டத்தில் நட்பு வட்டத்தை பெருக்க, ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சோவியத் யூனியன் என அழைக்கப்பட்ட ரஷ்யா, பல சிறு நாடுகளாக சிதறியதற்கு முன்பிருந்தே, இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு, உலகம் வியக்கும் வகையில் இருந்தது. 1950களில், இந்தியாவிற்கு தேவையான, 70 சதவீத ஆயுதங்கள், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்திய ராணுவத்திற்கு தேவையான, பல அதிநவீன ஆயுதங்கள் ரஷ்யாவிடமிருந்தே பெறப்பட்டன. அப்போது, பாகிஸ்தான், வெறும், 2 சதவீத ஆயுதங்களை மட்டுமே ரஷ்யாவிடமிருந்து பெற்றது. இந்நிலையில், சமீப காலமாக, இந்தியாவிற்கு தேவையான பெரும்பாலான ஆயுதங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்படுகிறது. ஆசியாவில் சக்திவாய்ந்த ஜனநாயக நாடான இந்தியாவுடன், அமெரிக்காவுக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஆசிய கண்டத்தில், ரஷ்யா தன் நட்பு வட்டத்தை பெருக்கிக் கொள்ளவே, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய ராணுவ அமைச்சர், செர்கி சொய்கு, அந்நாட்டுடனான ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பாகிஸ்தானுக்கு தேவையான ஆயுதங்களை சப்ளை செய்ய, இந்த திட்டத்தில் சொய்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். அப்போது பேசிய அவர், உலக நாடுகள் தற்போது பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய முன் வருவதாக கூறினார். ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது. பாகிஸ்தானுடனான ஒப்பந்தம் மட்டுமின்றி, சீனாவில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கவும், ரஷ்யா முன்வந்துள்ளது.

ஆசிய கண்டத்தில், அமெரிக்காவின் செல்வாக்கிற்கு இணையாக, ரஷ்யாவின் செல்வாக்கும் பெருகும் வகையில், இங்குள்ள நாடுகளுடன் நட்பு பாராட்ட ரஷ்யா முடிவு செய்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க - இந்திய உறவு வலுவடைவதை ரஷ்யா விரும்பாததால், இந்தியாவின் போட்டி நாடாக கருதப்படும் சீனாவுடனும், அடிக்கடி சண்டையிடும் பாக்.,குடனும் ரஷ்யா நட்பு பாராட்ட துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment