Sunday, November 30, 2014

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் 7 இலட்சம் வாக்குகள்!

Sunday, November 30, 2014
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பதில் வடக்கு மாகாண வாக்குகள் முக்கியத்துவம் பெறுமென அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இந்தநிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள சுமார் ஏழு இலட்சம் வாக்காளர்களைக் கவரும் முயற்சியில் அரச தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌சவும், எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் தீவிரமாக ஈடுபடுவார்கள் என அரசியல் அவதானிகள் ஊகம் தெரிவித்துள்ளனர்.
 
2005ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது  புலிகள் இயக்கம் மக்கள் வாக்களிப்பதற்குத் தடை விதித்தது.அந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ச 48 லட்சத்து 87ஆயிரத்து 152 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 47 லட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளையும் பெற்றனர். அதன்படி ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 786 வாக்குகள் வித்தியாசத்திலேயே மஹிந்த ராஜபக்‌ச வெற்றி பெற்றார்.
 
இம்முறை வடக்கு மாகாணத்தில் 2013ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 477 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 813 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 68 ஆயிரத்து 600 பேரும், மன்னார் மாவட்டத்தில் 75 ஆயிரத்து 737 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 53 ஆயிரத்து 683 பேரும், வவுனியா மாவட்டத்தில் 94 ஆயிரத்து 644 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment