Thursday, October 23, 2014

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணி அறிவிப்பு!

Thursday, October 23, 2014
இலங்கை::புதிய ஊதிய ஒப்பந்த விவகாரத்தில் தங்களது கோரிக்கையை ஏற்க வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் மறுத்ததால் ஆத்திரமடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து பாதியிலேயே பின்வாங்கினார்கள். இந்திய சுற்றுப்பயணத்தை வெஸ்ட் இண்டீஸ் திடீரென ரத்து செய்ததால், இலங்கையுடன் இந்தியா விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. கட்டாக், ஐதாராபாத், ராஞ்சி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் வரும் நவம்பர் 2-14 வரை நடைபெறுகிறது. வரும் அக்டோபர் 30 ஆம் தேதி இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடுகிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. அணியில் இடம் பெற்ற வீரர்கள் வருமாறு:- ஏஞ்சலோ மேத்யூஸ்( கேப்டன்), குசல் பெரரே, தில்ஷான், உபுல் தரங்கா, குமார் சங்கக்காரா, மஹிலா ஜெயவர்த்தனே, அஷன் பிரியஞ்சன், நிரோஷன் டிக்வெல்லா, திஷரா பெரரா, நுவன் குலசேகரா, தம்மிக்கா பிரசாத், லாகிரு காமேஜ், சதுரங்கா டி சில்வா, சேகூஜ் பிரசன்னா, மற்றும் சுராஜ் ராந்திவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா அணியில் இடம் பெறவில்லை. அதேபோல், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சுராஜ் ரந்தீவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் அணியில் இடம் பெற்றுள்ள குமார் சங்கக்காரா ஒருவேளை தகுதி பெறவில்லை என்றால் நிரோஷன் டிக்வெல்லா அணிக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment