Wednesday, October 29, 2014

இந்தியா-வியட்நாம் இடையே எண்ணெய் வள ஆய்வுக்கான ஒப்பந்தம் கையெழுத்து!

 Wednesday, October 29, 2014
புதுடெல்லி::அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வியட்நாம் பிரதமர் நிக்யூன் டான் டங் நேற்று, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வியட்நாமின் கடற்பாதுகாப்புக்காக போர்க்கப்பல்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.

பேச்சுவார்த்தையின் முடிவில் தென் சீனக்கடல் பகுதியில் வியட்நாம் அருகே எண்ணெய் வள ஆய்வுக்கு ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் ஒரு முக்கிய தூணாக வியட்நாம் விளங்குகிறது என்பதை இந்தியா மீண்டும் உறுதி செய்துள்ளது. இந்த பிராந்தியம் மற்றும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மிகப்பெரிய பங்களிப்பை வியட்நாம் வரவேற்கிறது’ என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த சந்திப்பின் போது ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ என்ற கொள்கைப்படி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு வியட்நாம் கம்பெனிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். மேலும் வியட்நாமில் தொழில் தொடங்க வருமாறு இந்திய தொழில் அதிபர்களுக்கு நிக்யூன் டான் டங்கும் அழைப்பு விடுத்தார். 

No comments:

Post a Comment