Friday, October 24, 2014

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீக்கியமையானது அந் நாடுகளில் புலிகள் இயக்கத்துக்கு சார்பாக செயற்படுபவர்களுக்கு மேலும் பலத்தை ஏற்படுத்தும் செயலாகும்!

Friday, October 24, 2014
இலங்கை::ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் புலிகள் மீதான தடையை நீக்கியமையானது அந்த நாடுகளில் புலிகள் இயக்கத்துக்கு சார்பாக செயற்படுபவர்களுக்கு மேலும் பலத்தை ஏற்படுத்தும் செயலாக அமைந்துள்ளது என்று இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
அதேவேளை, இந்த தடைநீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் மீண்டும் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் பிரிவினை வாதத்தை ஏற்படத்தவும் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என்று தெரிவித்த அவர் இது தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் மிகவும் விழிப்புடன் செயற்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
 
பாதுகாப்பு மற்றும் சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுபிடியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்றது இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வணிகசூரிய மேலும் விளக்கமளிக்கையில் :-
 
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமது ஒன்றியத்தின் சட்டவிதிமுறைகளுக்கு அமையவே புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது என்று அறிவித்துள்ளது எனினும் இந்த தற்காலிக தடைநீக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் வெளிவிவகார அமைச்சும் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன் இது தொடர்பிலான தமது நிலைப்பாட்டையும் அறிவித்துள்ளது.
 
ஆயுதத்தை தூக்கிய குழுவினர் புலிகள் இயக்கத்தினர் இலங்கையில் செயற்படாத போதிலும் நாட்டிற்குள் மீண்டும் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்றனர். இது தொடர்பில் எமது பாதுகாப்பு தரப்பினருக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
 
இந்த தடை நீக்கமானது வெளிநாடுகளில் இருந்து செயற்படும் புலிகள் ஆதரவு குழுவினருக்கு அந்த நாடுகளில வாழும் இலங்கை பிரஜைகளுக்க அழுத்தம் கொடுத்து மீண்டும் நிதி சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட வாய்ப்புக்கள் உள்ளன. தற்போது வெளிநாடுகளில் புலி கொடிகளை தூக்கிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவதை உதாரணமாக கொள்ளலாம் இதன் அழுத்தம் எமது நாட்டிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவே நாம் அலட்சியமாக இருக்க முடியாது எனவே நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம்.
 
ஐரோப்பிய நாடுகளில் புலிகள் மீதான தடை இருந்த காலத்தில் இலங்கையில் செஞ்சோலை சிறுவர் இல்லம் செயற்பட்டது போன்று அந்த நாடுகளில் தமிழ்சோலை என்ற பெயரில் தமிழ் பாடசாலைகள் நடாத்தப்பட்டு வருகிறது.
 
இந்த பாடசாலைகள் மூலம் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் குழைந்தைகள் மத்தியில் தீவிரவாதத் தன்மையை உட்டிவருகின்றனர். இது மிகவும் பாரதூரமான ஒன்றாகும்.
 
செஞ்சோலையைப் போன்று தமிழ்ச் சேலை என்ற பெயரில் இந்த நாடுகளில் அங்குள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரியாதவகையில் சுமார் 350ற்கும் அதிகமான பாடசாலைகள் செயற்பட்டு வருகின்றன. இதில் 20ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கற்றுவருகின்றனர்.
 
இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுக்கு எதிரான கருத்துக்கள் இங்குள்ள சின்னஞ்சிறுவர்களின் பிஞ்சு மனதில் தினிக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு புலிகள் இயக்கம் தொடர்பிலும் ஆயுத கலாச்சாரம் தொடர்பிலும் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட  (An Insight Into LTTE Administered Tamil School in Europe THE RADICALIZATION OF CHILDREN)  புத்தகத்தில் இது தொடர்பில் புகைப்பட ஆதாரங்களுடன் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment