Thursday, September 18, 2014

சீன அதிபருக்கு அகமதாபாத்தில் உற்சாக வரவேற்பு!

Thursday, September 18, 2014
அமதாபாத்:மூன்று நாள் அரசு முறை சுற்றுப் பயணமாக, சீன அதிபர், ஜி ஜின்பிங், 60, நேற்று இந்தியா வந்தார். அவரின் சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக, பிரதமர், நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின், ஆமதாபாத் நகருக்கு வந்த சீன அதிபருக்கு, பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, வல்லரசு அந்தஸ்து கொண்ட, பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடு. இரு நாடுகளுக்கும் இடையே, 1962ல் நடைபெற்ற போரில், சீனா வெற்றி பெற்ற போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே, அதற்குப் பிறகு சிறு சிறு உரசல்கள் தான் ஏற்பட்டதே ஒழிய, பாகிஸ்தானைப் போல, போர்கள் ஏற்படவில்லை.
 
அத்துமீறல்:
 
இரு நாடுகளுக்கும் இடையே அருணாச்சல பிரதேச மாநில எல்லை தொடர்பான மோதல் மற்றும் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் போன்ற பிரச்னைகள், இப்போது வரை இருந்த போதிலும், இரு தரப்பிலும், பெரிய அளவில் மோதல் இருந்ததில்லை.அண்டை நாடுகளில், 12க்கும் மேற்பட்ட நாடுகளுடன் எல்லை மோதலை கொண்டுள்ள சீனா, இந்தியாவுடன் சுமுகமான எல்லை உறவை பராமரிக்க விரும்புகிறது. அதன் ஒரு கட்டமாக, இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு, வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்வது போன்ற பல அம்சங்களை முன்வைத்து, சீன அதிபர், ஜி ஜின்பிங் நேற்று இந்தியா வந்தார்.பிற நாடுகளின் தலைவர்களை, நாட்டின் தலைநகர் தவிர்த்து, பிற நகரங்களில் சந்திப்பது என்ற, பா.ஜ., அரசின் புதிய கொள்கை படி, குஜராத்தின், ஆமதாபாத் நகருக்கு, சீன அதிபர் நேற்று வருகை தந்தார்.இந்த நாள், பிரதமர், நரேந்திர மோடியின், 64வது பிறந்த நாள் என்பதால், மிகுந்த உற்சாகமாகக் காணப்பட்ட பிரதமர் மோடி, தன் சொந்த மண்ணுக்கு வந்த சீனாவின், முதல் அதிபரை மனதார வரவேற்றார்.இலங்கையிலிருந்து, 'ஏர் சீனா' விமானத்தில், ஆமதாபாத் சர்வதேச விமான நிலையம் வந்த அதிபர் ஜி ஜின்பிங்கையும், அவர் மனைவி, பெங்க் லியுயானையும், குஜராத் முதல்வர், ஆனந்திபென் படேல் வரவேற்றார்.விமான நிலையத்தில், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன், குஜராத்தி பாரம்பரிய நடன வரவேற்பும், அதிபருக்கு அளிக்கப்பட்டது.
பூங்கொத்து:
 
அங்கிருந்து, சில கி.மீ., துாரத்தில் இருந்த, 'ஹயாத்' நட்சத்திர ஓட்டலுக்கு, அதிபரும், அவர் மனைவியும் சென்றபோது, ஓட்டல் வாசலில் காத்திருந்த மோடி, இருவரையும் அன்புடன் வரவேற்றார்; பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்தினார்.அதன் பிறகு, ஆமதாபாத் நகரில் உள்ள, தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் துவக்கிய, சபர்மதி ஆசிரமத்திற்கு, அதிபரை அழைத்துச் சென்றார் மோடி. அமைதியான அந்த ஆசிரமத்தின் ஒவ்வொரு அறைகளையும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் மோடி விளக்கினார். ஆசிரம வாயிலில் அமர்ந்து, இரு நாட்டு புகைப்படக்காரர்களுக்கு, இரு தலைவர்களும் உற்சாகமாக, 'போஸ்' கொடுத்தனர்.பின் அங்கிருந்து, சபர்மதி ஆசிரமம் அருகே பாயும் சபர்மதி நதிக்கரைக்கு அதிபரை அழைத்துச் சென்றார், மோடி. இருவரும் சிறிது நேரம் அந்த நதியை பார்வையிட்டனர்.ஆமதாபாத் சுற்றுப்பயணத்தை, நேற்று நிறைவு செய்த அதிபர் ஜி ஜின்பிங், இன்று டில்லியில் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர், மோடி மற்றும் அமைச்சர்களை சந்தித்து, இரு தரப்பு எல்லை பிரச்னை, வர்த்தக உறவு குறித்து, முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.
பொருளாதார சுற்றுப்பயணம்:
 
கடந்த மாதம் ஜப்பான் சென்றிருந்த பிரதமர், நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர், அபேயை சந்தித்து, இந்தியாவின் ரயில்வே உட்பட உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட ஜப்பான் பிரதமர், 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, இந்தியாவில் முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்தார்.இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவில், 1 லட்சம் கோடி ரூபாய் முதல், 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பல துறைகளில் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளார். ஏனெனில், உலகிலேயே அதிக அன்னிய செலாவணியை கொண்டு இருக்கும் நாடு சீனா. அண்டை நாடு என்பதால், இரு நாடுகளின் நல்லுறவுக்கும், இந்த பொருளாதார ஒத்துழைப்பு வழி ஏற்படுத்தும். அதே நேரத்தில், சீனாவுக்கு மிக நெருக்கமாக இருப்பதால், இந்தியாவில் அதிக முதலீடு, சீனாவுக்கு அதிக லாபம் பெற்றுத் தரும் என்றும் நம்பப்படுகிறது.
திபெத்தியர்கள் எதிர்ப்பு:
 
சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் உள்ள சீன துாதரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, திபெத் நாட்டு இளைஞர்கள், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 'சீனாவிடம் இருந்து திபெத்திற்கு சுதந்திரம் வேண்டும்' என, அவர்கள் கோஷமிட்டனர். மேலும், சீன கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடைபெறுகின்றன எனவும் அவர்கள் முழக்கமிட்டனர்.
மூன்று முக்கிய ஒப்பந்தங்கள்:
 
சீன அதிபருடன் அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும், ஆமதாபாத் வந்திருந்தது. ஹயாத் ஓட்டலில், இரு நாடுகளுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.சீனாவின் குவாங்சோயு நகரத்தையும், குஜராத்தின் ஆமதாபாத் நகரையும், சகோதரி நகரங்களாக மாற்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், இரு பாரம்பரிய நகரங்களுக்கும் இடையேயான, கலாசார, சமுதாய தொடர்புகளுக்கும், வளர்ச்சி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகத்திற்கும் தனித்தனியாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.இரு நகரங்களிலும், தொழில் பூங்காக்கள் அமைக்கும் ஒப்பந்தத்தில், குஜராத்தின் தொழில் வளர்ச்சி வங்கியும், சீனாவின் வளர்ச்சி வங்கி அதிகாரிகளும் கையெழுத்து இட்டனர். இந்த தொழில் பூங்காக்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் பொருட்களை தயாரிக்கும்.
 
காதி அணிந்த அதிபர்!
 
சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, பிரதமர், நரேந்திர மோடி, காதி, 'ஜாக்கெட்' ஒன்றை பரிசாக வழங்கி, அதை அணிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதை அன்புடன் பெற்றுக் கொண்ட ஜி ஜின்பிங், அதை தன் சட்டைக்கு மேலே போட்டுக் கொண்டார். சபர்மதி ஆசிரமத்தில் அணிவிக்கப்பட்ட, நுால் மாலையை அவ்வப்போது மகிழ்ச்சியுடன் தடவி பார்த்துக் கொண்டார்.

No comments:

Post a Comment