Monday, June 30, 2014

இலங்கை சிறையில் உள்ள 28 மீனவர்களை மீட்க பிரதமருக்கு கோரிக்கை ஜெயலலிதா மீண்டும் கடிதம்!

Monday, June 30, 2014
சென்னை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களையும், அவர்களது 41 படகுகளை யும் மீட்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
 
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 19ம் தேதி, நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தின் பேரில், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இலங்கை கடற்படையினரால் கடந்த 18ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 46 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 19ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்கள் மற்றும் அவர்களது 1 படகும் விடுவிக்கப்பட்டுள்ளது.ஆனால், கடந்த 23ம் தேதி இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட 11 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட படகுகளும், வலைகள் உள்பட மீன்பிடி சாதனங்களும் இன்னும் மீனவர்களிடம் ஒப்படைக்கப்
படவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கை கடற்படையினர் மீண்டும் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 17 மீனவர்களையும், அவர்களது 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றுள்ளனர். அவர்கள் இலங்கையில் உள்ள தலைமன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்தி வரும் இது போன்ற தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவங்கள் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைபிடிப்பு சம்பவங்கள் அவர்களது வாழ்க்கையை மேலும் கேள்விக்குறியாக ஆக்கி விடுகிறது.நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக கடந்த 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கச்சதீவு ஒப்பந்தம் காரணமாகவே தமிழக மீனவர்கள் பாக்ஜல சந்தியில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. பாக் ஜல சந்தியில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை தமிழக மீனவர்களுக்கு மீட்டு தர ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 மீனவர்கள் மற்றும் அவர் களது 38 படகுகள் உள்பட 28 தமிழக மீனவர்களையும், அவர்களது 41 படகுகளையும் மீட்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment