Tuesday, April 22, 2014

த.தே.கூ.- ஈபிடிபி இடையில் காரசாரமான வாதங்களுடன் இன்று கிளிநொச்சியில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!







Tuesday, April 22, 2014
இலங்கை::கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆகியோரது இணைத் தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்று வருகின்றது.

இதன்போது, மீள்குடியேற்றம் மற்றும் கண்ணிவெடி அகற்றல், கருத்தடை விவகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர்களுக்கிடையில் கடுமையான வாக்கு வாதங்களும் இடம்பெற்று வருகின்றது.
 
இதில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், சிறிதரன், விநாயகமுர்த்தி மற்றும் வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண உறுப்பினர்கள் திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
 
மேற்படி கூட்டத்தில் மீள்குடியேற்றம் கல்வி உள்ளுராட்சி மருத்துவம் போன்ற துறைகள் பற்றிய கருத்துக்கள் கலந்துரையாடப்பட்ட நிலையில் நேரம் போதாமை காரணமாக நேர்த்தியான எந்த தீர்மானங்களும் இன்றி கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.

அடுத்து மாவட்டத்தில் கல்வி நிலைமைகள் தொடர்பாக தன்னுடைய புள்ளிவிபரங்களையும் அடைவுகளையும் கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளர் சமர்ப்பித்த நிலையில் மாவட்டத்தின் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றி சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
கிராமப்புற பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், எனவே இது உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்ட போதும் அது உடனடி சாத்தியமில்லையென கல்வி அதிகாரிகளும், அமைச்சரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அக்கராயன், ஜெயபுரம், முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி போன்றவற்றில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிறைவு செய்ய பா.உறுப்பினர்களான சி.சிறீதரன், மு.சந்திரகுமார் ஆகியோர் ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு வேதனங்கள் வழங்கி வருவதற்கு வலய கல்விப் பணிப்பாளர் நன்றி தெரிவித்தார்.

அத்தோடு இப்போது கிளிநொச்சி அரச செயலகம் இயங்கிவரும் நிலம் வடமாகாணசபைக்கு சொந்தமானது எனவும், அதில் கிளிநொச்சி பொது நூலகம் மற்றும் விளையாட்டுத்துறைக்கான மண்டபங்களும் அமைக்க மாகாணசபை திட்டமிடுவதாக தெரிவித்த போதும் அந்த நிலத்தை முழுமையாக உடனடியாக தரமுடியாது எனவும், அதில் தொடர்ந்தும் அரச செயலகத்தின் சில பிரிவுகள் இயங்கும் எனவும் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
 

உள்ளுராட்சி தொடர்பாக ஆராய்வின் போது கரைச்சி பிரதேசசபையால் நிர்வகிக்கப்படும் சந்தைகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும், வட்டக்கச்சி சந்தை இன்னும் திறக்கப்படவில்லை எனவும் வட்டக்கச்சியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீதி ஒன்று பிரதேசசபை உறுப்பினர் ஒருவரால் வேலை இடைநடுவில் நிறுத்தப்பட்டதாகவும் பா.உறுப்பினர் சந்திரகுமார் கருத்துத் தெரிவித்த போது இதற்கு அங்கு பிரசன்னமாகியிருந்த தவிசாளர் குகராஜா பதிலளித்தார்.

சபையை நடத்துவற்கு இடையில் இருக்கி;ன்ற இடையூறுகள் குறித்தும் கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் தன்னிச்சையான செயற்பாடுகள் அசமந்தப் போக்குகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்தார். வட்டக்கச்சி சந்தை திறக்கப்படுவது ஏன்தாமதம் ஆகின்றது என்பதற்கான காரணங்களையும் பட்டியிலிட்டார்.

இதன்போது மாகாணசபை உறுப்பினர் தவநாதன் தவிசாளருடன் முரண்பட்டார்.  மேலும் வைத்தியர் குறைபாடுகள் போசாக்கின்மை, வேலையற்ற பட்டதாரிகள், கிளிநொச்சி தொழில் நுட்ப கல்லூரி எனபவை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது..

பின்தங்கிய பிரதேசங்களை நோக்கிய ஆசிரியர் இடமாற்றங்களின் போது அரசியல் தலையீடுகள் அற்ற சிறந்த பொறிமுறை பின்பற்ற  வேண்டும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் இன்று இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில் வட மாகாணத்தை  பொறுத்தவரை சில குறிப்பிட்ட பாடங்களை தவிர ஆசிரியர் ஆளணி வளம் அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும் வன்னியில் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது குறிப்பாக பாடரீதியான ஆசிரியர் வளப்பற்றாக்குறை தீர்க்கப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது. கிளிநொச்சி கல்வி வலயத்தில் அடுத்த வாரம் தொடக்கம் 422 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட போகிறது இந்த பற்றாக்குறையினை கிளிநொச்சி வலயம் எவ்வாறு கையாளப்போகிறது என்பது தொடர்பில் இது வரை ஒரு திட்டமில்லை எனக்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்

அரசின் தேசிய கொள்கைக்கு அமைவாக 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் ஆனால் வடக்கில் 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையில் உள்ளது. அத்தோடு வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்தில் 28 மாணவர்களை கொண்ட வகுப்பு ஒன்றிற்கு ஒரு ஆசிரியரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 45 மாணவர்களை கொண்ட வகுப்பு ஒன்றி;ற்கு ஒரு ஆசிரியரும் என்ற விகிதத்தில் ஆசிரியர் வளம் காணப்படுகிறது. இந்த பாகுபாடான வேறுபாடுகளை தீர்ப்பதற்குரிய எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை எனவே விரைவில் ஆசிரியர் வளம் தொடர்பில் காணப்படுகின்ற மேற்படி நிலைமைகளை நியாயமான முறையில் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படல் வேண்டும். எனக்குறிப்பிட்டார்.

அத்தோடு வட மாகாணத்தின் கல்வி கொள்கை எல்லா பிரதேசங்களுக்கும் ஒரே விதமாக இருக்க வேண்டும் வசதிவாய்ப்புகள் கூடிய பிரதேசங்களுக்கு ஒரு விதமாகவும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு ஒரு விதமாகவும் இருப்பது மாவட்ட கல்விவளர்ச்சியினை கேள்விக்குள்ளாக்கிவிடும். என்பதனை சுட்டிக்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் முட்கொம்பன் பாடசாலையில் கடந்த முறை சாதாரண தர பரீட்சையில் 26 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் இவர்கள் க.பொ.உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்விகற்கும் வகையில் அந்த பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவை ஆரம்பிக்க நடவடிக்க எடுக்கவேண்டும் எனவும் கேட்டுகொண்டார்

மேலும் சுகாதாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த போது வன்னியின் கிராம மருத்துவமனைகளில் நிலவுகின்ற மருத்துவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதோடு யாழ் பல்கலைகழகத்திற்கு வருடம்தோறும் வடக்கு மாகாணத்திலிருந்து 60 இற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பீடத்திற்கு செல்கின்ற போது அதில் பெரும்பான்மையானவர்கள் திரும்ப இந்த மண்னிற்கு சேவை செய்ய முன்வராமை கவலைக்குரியவிடயமாகும்.அத்தோடு தர்மபுரம் வைத்தியசாலையின் காணி பிணக்கினை விரைவாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு கிளிநொச்சியின் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் பத்திரிகைகளிலும், பொது மக்கள் மத்தியிலும் தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டடு வருகிறது இது தொடர்பிலும் ஒருங்கிணைப்பு குழு கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

No comments:

Post a Comment