Tuesday, April 1, 2014

போதைப்பொருட்களான கஞ்சா, அபின் கடத்தல் தடுக்கப்படும்- இராணுவம்!

Tuesday, April 01, 2014
இலங்கை::
போதைப்பொருட்களான கஞ்சா, அபின் போன்றவை கடல்மார்க்கமாக கடத்தப்படுவதைத் தடுக்கவும், வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக ஆட்கள் நுழைவதைத் தடுக்கவுமே மீனவர்களிடம் பதிவு நடவடிக்கை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் மக்களினதும், மீனவர்களின் நன்மை கருதியுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என இராணுவம் தெரிவித்துள்ளது.
 
அத்தோடு, பாஸ் நடைமுறையை தாம் அமுல்படுத்தவில்லையெனவும் அவ்வாறு ஊடகங்களில் வெளியான செய்திகளையும் இராணுவம் மறுத்துள்ளது. நேற்று முன்தினம் யாழ்.வடமராட்சிப்பகுதிலுள்ள மீனவ சங்களுக்கு சென்ற இராணுவத்தினர், நேற்று 31ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு பாஸ் நடைமுறை அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளனர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், நேற்றையதினம் யாழ். பலாலி படைத்தலைமையகத்தின் ஊடகப் பிரிவினர் மேற்படிச் செய்தி குறித்து விளக்கமளித்துள்னர். அதில் யாழ். வடமராட்சி கடற்பரப்பின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பெருமளவான போதைப்பொருட்கள் கடல்மார்க்கமாக கடத்தப்பட்டு வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தவே மீனவர்களிடம் பதிவு நடவடிக்கையினை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
 
மீனவர்களின் பெயர், படகுகளில் செல்லும் மீனவர்களின் எண்ணிக்கை, தேசிய அடையாள அட்டை இலக்கம், என்பனவே பதியப்படுகின்றன. ஆனால், மீனவர்களுக்கான பாஸ் நடைமுறையை இராணுவத்தினர் மீள ஆரம்பிக்கவில்லை.
 
வடமராட்சி கடற்பரப்பின் ஊடாகவே யாழ்ப்பாணத்திற்குள் கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. அத்தோடு, பல்வேறு பொருட்களும் கடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆட்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதாவது, கள்ளக்கடத்தல் காரர்களும் வருவததைத் தடுக்கவுமே மேற்படி பதிவினை இராணுவத்தினர் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.
 
ஒரு படகில் செல்லும் மீனவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் திரும்பிவரும்போது, அது குறித்து இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொள்வார்களே தவிர, பாஸ் நடைமுறைகள் எதுவும் நடைமுறைப்படுத்தவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் நேற்று முதல் தமது
விபரங்களை பதிவு செய்து அனுமதி (பாஸ்) பெற்ற பின்னரே தொழிலுக்குச் செல்ல முடியுமென்று தாம் அறிவிக்கவில்லையென்று 52வது படைப்பிரிவின் அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயசுந்தர தெரிவித்ததாக வடமராட்சி மீனவர் சங்கங்களின் சமாசத்தலைவர் வ.அருள்தாஸ் தெரிவித்திருந்தார்.
 
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், நேற்று முதல் தமது விபரங்களை பதிவு செய்து பாஸ் பெற்ற பின்னரே தொழிலுக்கு செல்ல வேண்டும் என இராணுவம் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
 
இந்நிலையில், இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று வடமராட்சியிலுள்ள 521வது படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போதே குறித்த படைப்பிரிவின் அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்ததாக சமாசத்தலைவர் கூறினார்.
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கொண்டுவரப்படுகின்ற போதைவஸ்துகள், தங்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக தற்காலிகமாக கடற்கரையில் படை முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.
 
இதனால், சந்தேகத்திற்கிடமாக அவ்விடத்தில் நடமாடும் சிலரிடம் நாம் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவோமே தவிர, மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கு பாஸ் பெற வேண்டும் எனக் கூறவில்லையென்று இக்கலந்துரையாடலில் குறித்த இராணுவ அதிகாரி விளக்கமளித்ததாக சமாசத்தலைவர் வ.அருள்தாஸ் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment