Sunday, March 30, 2014

சேது சமுத்திர திட்டத்தால் எந்த நன்மையும் ஏற்படாது: முதல்வர் ஜெயலலிதா !

Sunday, March 30, 2014
சென்னை::தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், சேதுசமுத்திர திட்டத்தை அ.தி.மு.க. எதிர்த்தது என்றும், மக்களுக்காகவே திட்டங்கள் என்று அ.தி.மு.க. கருதுவதாகவும், அதே நேரத்தில்
திட்டங்களுக்காகவே மக்கள் என்று தி.மு.க. நினைப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார். ராமநாதபுரத்தில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:_
இன்றைய சூழ்நிலையில் நம் முன் தலையாய பிரச்சனையாக விளங்குவது தமிழக மீனவர்கள் பிரச்சனை. இலங்கை கடற்படையின் தொடர் துன்புறுத்தல், சிறைபிடிப்பு காரணமாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.  
இந்தச் சூழ்நிலையில் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை 25.3.2014 அன்று நடைபெறுவதாக இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பு இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை நான் விதித்து இருந்தேன். ஆனால், இலங்கை அரசோ மேலும் சில தமிழக மீனவர்களை சிறைபிடித்தது. இதன் காரணமாக 25.3.2014 அன்று நடைபெறுவதாக இருந்த இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு நான் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், நேற்று 77 தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது. மீதமுள்ள 21 மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அனைத்து தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்ட பின் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். 
கடந்த 10 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு கண்டதா என்றால் நிச்சயமாக இல்லை.  
தங்களுக்கு வேண்டிய வளம் கொழிக்கும் இலாகாக்களைப் பெற்றுக் கொள்வதில் காட்டிய அக்கறையில், நூறில் ஒரு பங்கையாவது மீனவர் பிரச்சனையில் காட்டினாரா தி.மு.க. தலைவர் கருணாநிதி? இல்லையே! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இந்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது தி.மு.க.  தி.மு.க_வின் இந்த ஊழலினால் இந்திய நாட்டின் கஜானா சுரண்டப்பட்டது என்றால், சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் நிர்மூலம் ஆக்கப்படும். 
சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் காரணமாக, ஆர்.கே.பச்சவுரி தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அமைத்தது. இந்த வல்லுநர் குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தி தனது அறிக்கையை மத்திய அரசுக்கு  சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் திட்டம் சாத்தியமற்றது என தெரிவித்துள்ளது.  ஆனால், இந்த அறிக்கையை புறக்கணிக்க முடிவு செய்து சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  
சேது சமுத்திர திட்டத்தை நான் முதலில் ஆதரித்ததாகவும், பின்னர் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்ததாகவும் கூறி இருக்கிறார் கருணாநிதி. 
சேது சமுத்திரத் திட்டத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்பு ஆதரித்தது; நான் ஆதரித்தேன் என்பது உண்மை தான். நான் முதலமைச்சராக முதன் முறை இருந்த சமயத்தில் 1994_ஆம் ஆண்டு பல்லவன் போக்குவரத்து ஆலோசனை பணிகள் நிறுவனம் மூலம் இதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க சொன்னேன். 
இந்த நிறுவனம் இதன் அறிக்கையை 1996_ஆம் ஆண்டு அரசுக்குச் சமர்ப்பித்தது. 
இந்தத் திட்டத்தினை என்இஇஆர்ஐ அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்தன. 
இந்த ஆய்வுகளில் சேது சமுத்திரக் கால்வாய் அமைய உள்ள இடத்தில் 12 மீட்டர் ஆழம் மட்டுமே தோண்ட இயலும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.  
2004_ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தவுடன் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை வகுத்துள்ள விதிமுறைகளின்படி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு மாநில அரசின் தடையின்மைச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். இதன்படி தடையின்மைச் சான்றிதழ் கோரி மத்திய அரசு தனது கருத்துருவினை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியது. இந்தக் கருத்துருவின் மேல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்யும் வகையில் வல்லுநர் குழு ஒன்றை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அமைத்தது. சுற்றுச்சூழல் பாதிப்பினை விரிவாக ஆய்வு செய்த இந்த வல்லுநர் குழு தனது அறிக்கை+யினை அரசுக்கு சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில் சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்குவதற்கு முன்னதாக, விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என எச்சரித்திருந்தது. சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்று தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தால், அதாவது என்இஇஆர்ஐ அமைப்பினால் தெரிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் இந்த வல்லுநர் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறது. அகழ்வுப் பொருட்கள் கொட்டப்படும் இடத்தைக் கருத்தில் கொண்டு, அகழ்வுப் பணிகள் காரணமாகவும், அகழ்வுப் பொருட்களைக் கொட்டுவதாலும் அப்பகுதியில் ஏற்படக் கூடிய பாதிப்பு பற்றிய மதிப்பீடு, கால்வாய்ப் பணி நிறைவுற்று போக்குவரத்து நடைபெறும் காலத்தில் ஏற்படுகின்ற பாதிப்பு, எண்ணெய் சிந்துவதால் ஏற்படுகின்ற பாதிப்பு போன்ற பல்வேறு ஆய்வுகள், நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த வல்லுநர் குழு திட்டவட்டமாகப் பரிந்துரைத்து இருந்தது. ஆனால், இவற்றையெல்லாம் முற்றிலும் புறக்கணித்துவிட்டு இத்திட்டத்திற்கான தடையில்லா சான்றிதழைக் கூட மாநில அரசிடம் இருந்து பெறாமல் இந்தத் திட்டம் 2005_ஆம் ஆண்டு மத்திய அரசால் அவசர கதியில் தொடங்கப்பட்டது. 
விரிவான ஆய்வு நடத்தப்பட்டு இருந்தால், சேது சமுத்திரத் திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும், மீனவர்களை பாதிக்கும் என்பது தெளிவாகி இருக்கும்.  ஆனால், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கான அகழ்வுப் பணிகள் பாக் ஜலசந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. அகழ்வுப் பணியில் ஈடுபட்ட கப்பல்களின் நடமாட்டத்தால் அப்பகுதியில் மீன்களைப் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகள் சேதம் அடைந்தன. மீன்கள் முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும் இடங்களான கடல் புதர்கள், கடலுக்குள் வளருகின்ற செடி கொடி முதலான கடல்வாழ் தாவரங்கள் அகழ்வுப் பணியால் அழிக்கப்பட்டன. சேதுசமுத்திரப் பணிகளின் விளைவாக ஆழ்கடல் பகுதியின் இயற்கைச் சூழலே மாறி, மீன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிக அளவு இறால் மீன்கள் கிடைத்த நிலை மாறி, இறால் மீன் கிடைப்பதே அரிது என்ற நிலை ஏற்பட்டது. கடல்வாழ் உயிரினங்களும், அரிய வகை மீன்களும் இடம் பெயரத் தொடங்கின.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கடலின் இயல்பு பாதிக்கப்படும் என்றும், பாரம்பரியமாக நடந்து வரும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என்றும், கப்பல் செல்லும் பாதையில் மீன் பிடிக்கக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்றும், பவளப் பாறைகள் அழிக்கப்படும் என்றும், மீன்வளம் குறையும் என்றும், மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என்றும் மீனவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். இது நியாயமானது தான்.  
சேது சமுத்திரக் கால்வாயின் ஆழம் 12 மீட்டர். ஆனால், அதில் பயணிக்கும் கப்பலின் ஆழம் 10 மீட்டருக்கு மேல் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்தக் கால்வாயில் 20,000 டன் எடை கொண்ட கப்பல்கள் தான் செல்ல முடியும். 30,000 டன் எடை கொண்ட கப்பல்களை எடுத்துக் கொண்டால் தற்போதுள்ள கப்பல்களில் ஒரு சில கப்பல்கள் மட்டுமே இந்தக் கால்வாயில் செல்ல முடியும். ஏனெனில், ஒரு சில கப்பல்கள் தான் 10 மீட்டர் ஆழத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதற்கு மேல் எடை கொண்ட கப்பல்கள் இந்தக் கால்வாயில் செல்ல முடியாது. தற்போது உலகில் ஆழம் அதிகம் கொண்ட கப்பல்கள் தான் பெரும்பாலும் வடிவமைக்கப்படுகின்றன. 2011_2012 ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சென்ற கப்பல்களின் எண்ணிக்கை 1,492 ஆக இருந்தாலும், இதன் எண்ணிக்கை 
2012_2013 ஆம் ஆண்டு 1,294 ஆகக் குறைந்துவிட்டது. இந்த எண்ணிக்கை குறைந்ததற்குக் காரணம் பெரிய கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்தது தான். 
இந்தப் பெரிய கப்பல்கள் சேது சமுத்திரக் கால்வாய் வழியாக செல்லவே முடியாது. 
எனவே சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் பெரிய கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வர முடியும் என்பது வடிகட்டிய பொய். இந்தத் திட்டத்தால் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து போகும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதும் பொய். 
தமிழ்நாட்டின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியில் உள்நாட்டிலிருந்து பெறப்படும் நிலக்கரி ஒடிசாவில் உள்ள பரதீப், மேற்கு வங்காளத்தில் உள்ள ஹால்டியா, ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் போன்ற கிழக்கு துறைமுகங்களில் இருந்து, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு எடுத்து வரப்படும் நிலக்கரியில் 30 விழுக்காடு நிலக்கரி தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேருகிறது. இந்தப் பணி பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.  இந்த  கப்பல்களின் ஆழம் 10.9 மீட்டர் முதல் 13.5 மீட்டர் வரை உள்ளது. சேது சமுத்திரக் கால்வாயில் 10 மீட்டர் ஆழம் உள்ள கப்பல்கள் மட்டுமே பயணிக்க முடியும். எனவே, பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்கள் கூட சேது சமுத்திரக் கால்வாயின் வாயிலாக செல்ல இயலாது. தமிழகத்திற்குத் தேவையான நிலக்கரியை எடுத்து வரும் கப்பல்கள் கூட சேது சமுத்திரக் கால்வாயில் பயணிக்க முடியாது. இந்தத் திட்டத்தினால் யாருக்கு என்ன பயன்?  
சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் இடம் தூத்துக்குடியின் வட பகுதியில் உள்ளது. ஆனால், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு அல்லது தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் தென்பகுதி வழியாக பயணிக்கின்றன. இதற்கும் இந்தத் திட்டத்தினால் பயன் இல்லை. இப்படி, எதற்கும் பயன் இல்லாத திட்டம் தேவை தானா?
சேது சமுத்திரக் கால்வாய் இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளையும், கிழக்குக் கடற்கரை பகுதிகளையும் இணைக்கும் என்பது தான் உண்மை. அதன் காரணமாக தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பது உண்மையல்ல.  அப்பொழுதும் கப்பல் போக்குவரத்தில் சரக்குகள் அனுப்பப்படுமா என்பது சந்தேகமே! ஏனெனில், மேற்கு கடற்கரை துறைமுகங்களில் இருந்து உள் நாட்டுக்கு சரக்குகளை லாரிகள் மூலமே கொண்டு செல்ல இயலும்.  
சிறிய கப்பல்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய சேது சமுத்திர கால்வாய் பகுதியில், ஒரு கப்பல் சென்ற பின் மண் அரிப்பு ஏற்பட்டு கால்வாயின் ஆழம் குறையும் என்பதால், அக்கால்வாயில் தூர்வாரும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். சேது கால்வாய்க்குள் கப்பலை ஓட்டிச் செல்ல சிறப்புக் கால்வாய் மாலுமிகளை கூடுதல் செலவு செய்து அமர்த்த வேண்டும். இந்தக் கப்பலுக்கு என்று ஒரு டடுங்ச்சி நகீடுஙீ செல்ல வேண்டும்.  இதற்கெல்லாம் மிக அதிக அளவில் கூடுதல் செலவு ஏற்படும். இந்தத் திட்டத்தால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. மாறாக சுற்றுச்சழல் பாதிப்பு ஏற்பட்டு, மீன் வளம் குறைந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். 
இந்தத் திட்டத்தினால் தென் தமிழகம் எந்த விதத்திலும் வளர்ச்சி அடையாது.  மாறாக மீனவர்களின் வாழ்வாதாரம் தான் பாதிக்கப்படும். சுற்றுச்சழல் பாதிப்பு ஏற்படும்.  எனவே தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவற்றையெல்லாம் மீறி கருணாநிதி இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்வது எதற்காக? யாருடைய நன்மைக்காக? என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.  ஏற்கெனவே இந்தத் திட்டத்திற்காக கிட்டத்தட்ட 830 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுவிட்டது. 
அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் திட்டம் சேது சமுத்திரத் திட்டம். அப்பாவி மீனவர்களை நிர்கதியாக்கத் துடிக்கும் திட்டம் சேது சமுத்திரத் திட்டம். சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டம் சேது சமுத்திரத் திட்டம். மீன் வளத்தை பாழ்படுத்துகின்ற திட்டம் சேது சமுத்திரத் திட்டம். மொத்தத்தில் தமிழக மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்காத திட்டம்.
மக்களுக்காகவே திட்டங்கள் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. திட்டங்களுக்காகவே மக்கள் என்று தி.மு.க. கருதுகிறது.  இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 
தென் தமிழகம் உண்மையிலேயே வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், தென் தமிழகத்தில் தொழில் தொடங்க முனைவோருக்கு ஆயத் தீர்வை நீக்கம் உள்பட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளிக்க வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் போது, இது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும் என்ற உறுதியை இந்தத் தருணத்தில்  உங்களுக்கு நான் அளிக்கிறேன். 
தன்னலத்திற்காக திட்டங்களைத் தீட்டும் தி.மு.க_வினரையும், அதற்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ் கட்சியையும் இந்தத் தேர்தலில் நீங்கள் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மாற்றாந்தாய் போக்கினையும், அதற்கு துணை போகும் தி.மு.க_வையும் மீறி தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும், அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நாம் தீர்வு கண்டுவிட்டோமா என்றால் இல்லை என்பது தான் விடை.  நிச்சயமாக இல்லை. மாநில அரசு மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியாது.  உதாரணமாக மீனவர்கள் பிரச்சனை, அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் உள்ளது.  இதனை தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு செய்கிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.  
இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இந்த காங்கிரஸ் கட்சியை மத்திய ஆட்சியிலிருந்து அகற்ற நீங்கள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
கச்சத் தீவினை மீட்பதற்காக நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் தமிழக மீனவர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்த அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. அதோடு நின்றுவிடவில்லை. கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே அல்ல என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. இப்படி தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் ஆட்சிக்கு நீங்கள் இந்தத் தேர்தலின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தி.மு.க_வுக்கும் பாடம் புகட்ட ஒரு நல்ல வாய்ப்பு இந்தத் தேர்தலின் மூலம் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது.  இந்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.   
வருகின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல.  இந்தியாவின் வளர்ச்சியை மாற்றி அமைக்கும் தேர்தல்.  இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றி எழுதப்போகிற தேர்தல்.  அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காக்கும் தேர்தல்.    
கடந்த பத்தாண்டு காலமாக விலைவாசி உயர்வு, பண வீக்கம், பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்வு, உர விலை உயர்வு என பல்வேறு பிரச்சனைகளுக்கு நீங்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் முக்கியக் காரணமாக விளங்குவது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் தான். 
மத்திய அரசின் இது போன்ற தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்திய நாட்டில் முதலீடுகள் குறைந்துள்ளன. ஏற்றுமதி குறைந்துள்ளது. நடப்புக் கணக்கில் அதிகமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரமே சின்னாபின்னம் ஆக்கப்பட்டுவிட்டது. அதன் சுமை ஏழைகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது. 'இந்த சுமையிலிருந்து விடுபட தேவை மாறுதல்! அதற்கு வழிவகுக்க இருப்பது வருகின்ற மக்களவைத் தேர்தல்!' என்பதை  மறந்துவிடாதீர்கள். 
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது தான் காங்கிரஸ் ஆட்சியின் தாரக மந்திரம்.  2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டை நடத்தியதில் ஊழல், விமானங்களுக்கு எஞ்ஜின் வாங்கியதில் ஊழல் என, ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.  இதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள்.  இப்படிப்பட்ட மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து தூக்கி எறிவது நம் எல்லோருடைய ஜனநாயகக் கடமையாகும். 
கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழ் நாட்டிற்கு எதையாவது செய்ததா? இல்லையே.  'மக்கள் நலம்' 'மக்கள் நலம்' என்று சொல்லி உங்களின் வாக்குகளைப் பெற்றார் திரு. கருணாநிதி. ஆட்சியில் அமர்ந்தவுடன் உங்கள் நலத்தை மறந்துவிட்டார். இப்படிப்பட்ட கட்சிக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்; சரியான பாடம் புகட்ட வேண்டும்; மக்கள் விரோத காங்கிரஸ் கட்சிக்கும், திமுக_வுக்கும் இந்தத் தேர்தலில் மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி மரணஅடியை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
இந்த நேரத்தில் வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், நான் சொல்வதை கவனமாகக் கேட்க வேண்டும்.  அதை மனதில் இறுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  உங்கள் வாக்கு என்பது உங்கள் உரிமை.  உங்கள் வாக்கு என்பது இந்த நாட்டின் சொத்து.  உங்கள் வாக்குதான் இந்தியாவின் தலைவிதியையே மாற்றி அமைக்கப் போகிறது.  அத்தகைய சக்தி படைத்தது உங்கள் வாக்கு.  அந்த வாக்கை வீணாக்கிவிடாதீர்கள்.  இந்தத் தேர்தலில் பல கட்சிகள் களம் இளங்கியுள்ளன.  அந்தக் கட்சிகளெல்லாம் உங்களிடம் வந்து வாக்கு கேட்கின்றன.  வேறு கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால், அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை.  நீங்கள் வாக்களித்தாலும் அந்தக் கட்சிகள் வெற்றிபெறப் போவதில்லை.  வாக்குகள் சிதறிவிடும்  அவ்வளவுதான்.  உங்கள் வாக்கு வீணாகிவிடும்.  எனவே, உங்கள் வாக்குகளை வீணாக்கிவிடாதீர்கள்.  மாறாக, வருகின்ற மக்களவை தேர்தலில் தமிழக வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் 40 தொகுதிகளிலும் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அளித்த வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றிபெறச் செய்தால், மத்தியிலே இந்தியாவை வல்லரசாக்கக் கூடிய வலிமையான ஆட்சி அமையும்.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஆட்சி மத்தியிலே அமைந்தால், இந்த நாட்டு மக்களுக்கும், உங்களுக்கும் எண்ணற்ற நன்மைகள் வந்து குவியும்.  
எனவே, மறவாமல், தவறாமல் வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் 40 மக்களவை தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவர்களை மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால், தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி மத்தியிலே ஆட்சி மாற்றம். அந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையை நீங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்க வேண்டும்.  எனது கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
உங்களின் ஆதரவோடு உங்கள் ஆட்சி மத்தியில் அமையப் பெறும் போது, 
இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், இறக்குமதியை தேவைக்கேற்ப செய்யவும்;  
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும்;
அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும்;  
தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலை சிரமமின்றி மேற்கொள்ளவும்;  
இலங்கை போரின் போது இனப் படுகொலை செய்தவர்களை ஐக்கிய நாடுகள் சபை மூலம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும், அதற்கு இந்தியாவே தீர்மானம் முன்மொழியவும்;  
மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்க வழிவகை செய்யவும்; 
தமிழ் மொழியை ஆட்சி மொழி ஆக்கவும்; 
சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை ஆக்கவும்; 
வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்திய ராணுவத்தை, தரைப்படையை, 
கப்பற் படையை, விமானப் படையை நவீனமயம் ஆக்கவும்;
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அறவே ஒழியவும்;
வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்கவும்; 
2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட ஊழல்களுக்கு காரணமானவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரவும், இந்த ஊழல்கள் மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை <டுகட்டவும்; 
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயக் கொள்கையை மாற்றவும், பெட்ரோலியப் பொருட்களின் விலை ஓர் ஆண்டு முழுவதும் நிலையாக இருக்கவும்;  
தனி நபருக்கான வருமான வரி உச்ச வரம்பினை 5 லட்சம் பொயாக உயர்த்தவும்; 
நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற பாதையில் இந்தியாவை வழி நடத்திச் செல்ல எங்களுக்கு ஒரு நல்வாய்ப்பினை நல்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.  செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

No comments:

Post a Comment