Saturday, March 1, 2014

புலிகளை ஆதரிக்கும் இயக்கங்களுக்கு தடை : கவர்னரிடம் வற்புறுத்த ஞானதேசிகன் முடிவு!

Saturday, March 01, 2014
சென்னை::புலிகளை ஆதரிக்கும் இயக்கங்களை தடை செய்ய வலியுறுத்தி, கவர்னர் ரோசய்யாவிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர், ஞானதேசிகன் கூறினார்.

அவரது பேட்டி: சென்னை, சத்தியமூர்த்தி பவனில், தமிழர் முன்னேற்றப் படை இயக்கம் ஆர்ப்பாட்டம் செய்ததிலும், கொலைவெறி தாக்குதல் நடத்தியதிலும், ஐந்து பேர் படுகாயம் அடைந்தது, மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, மிகவும் கண்டனத்துக்குரியது. சத்தியமூர்த்தி பவன் கட்டடத்தில் உள்ள, காங்கிரஸ் கட்சியினர் தடுத்திருக்கா விட்டால், கட்சி அலுவலகம் சேதப்படுத்தப்பட்டிருக்கும்; கட்சியினர் சிலரின் உயிர்களும் பறிக்கப்பட்டிருக்கும். ஒரு கட்சி அலுவலகம் முன், நாகரிகமற்ற முறையில், வன்முறை வெறியாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபடுவதை, இந்த அரசு, எத்தனை நாட்களுக்கு அனுமதிக்கப் போகிறது?
 
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல, ராஜிவ் சிலைகளை சிதைக்கும், சமூக விரோத செயல்களை எந்த இயக்கம் செய்யும் என்பது, போலீசாருக்கு தெரியும். உடனடியாக, அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட அந்த, மூன்று சிலைகளும் உடனடியாக தமிழக காங்கிரஸ் சார்பில் ஓரிரு நாளில் உடனடியாக நிறுவப்படும். இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, தமிழக கவர்னரை சந்தித்து, விடுதலைப் புலிகள் ஆதரவாகச் செயல்படுகிற இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்படும். இவ்வாறு, ஞானதேசிகன் கூறினார்.

ராஜிவ் சிலை உடைப்பு சம்பவத்தை கண்டித்து, காங்கிரசார் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், கைது செய்யப்பட்ட, வட சென்னை மாவட்ட தலைவர், மனோ கூறுகையில், ""ராஜிவ் சிலைகள் உடைக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். போலீசாரின் அலட்சியத்தால், இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று இடங்களில், ராஜிவுக்கு வெண்கல சிலைகள் அமைக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment