Thursday, February 27, 2014

13வது திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி பிரிவினைவாத சக்திகளுடன் அதிகாரப் பகிர்வு தேவையில்லை!

Thursday, February 27, 2014
இலங்கை::13வது திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி அதிகாரங்களைக் கோரிய அமைச்சர்கள் சிலர், தற்பொழுது ஜெனீவாவின் ஊடாக அதிகாரப் பகிர்வைக் கோர முயற்சிக்கின்றனர். பிரிவினைவாத சக்திகளுடன் அதிகாரப் பகிர்வொன்றுக்குச் செல்ல வேண்டிய தேவை இல்லையென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவை எமக்கு எதிராக நேரடியான பொருளாதாரத் தடையை விதிக்க முடியாது. இதற்காக பாதுகாப்புச் சபையினதும், பொதுச் சபையினதும் அங்கீகாரம் பெறவேண்டும். 13வது திருத்தச் சட்டம் எமக்கு பலாத்காரமாகத் திணிக்கப்பட்ட ஒன்றாகும் என அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட அமைச்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
13வது திருத்தச்சட்டம் மற்றும் இலங்கைக்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பாக அமைச்சர் விமல்வீரவன்ச, அமைச்சர் ரோஹித்த அபயகுணவர்த்தன, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரிடம் நேற்று தினகரன் கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சரவை என்ற வகையில் கூட்டுப்பொறுப்பை எதிர்கொள்ள வேண்டுமென்றும், தனி நபர்களாக அல்லது குழுக்களாக கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமில்லையென்றும் அமைச்சரவைக் குழுவாகப் பேசுவதே பொருத்தமானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிடுகையில், எல்.ரி.ரி.ஈ. யினர் பலமாக இருந்த காலத்தில் 13வது திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி அதிகாரங்களைக் கோரிய அமைச்சர்கள் சிலர், தற்பொழுது ஜெனீவாவின் ஊடாக அதிகாரப் பகிர்வைக் கோர முயற்சிப்பதாக வீடமைப்பு மற்றும் பொறியியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தைப் பயமுறுத்தி, பிரிவினைவாதிகளுடன் இணைந்து புலிகள் தேவையில்லையெனக் காண்பித்து அதிகாரப் பகிர்வைக் கோருவதற்கு இவர்கள் முயற்சிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் பிரேரணையால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என பயமுறுத்தி அதிகாரப் பகிர்வுக்குச் செல்லவே முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபைத் தேர்தல் நடத்துவதை அரசாங்கம் பின்னடித்தபோது அதற்கு எதிராக அழுதவர்களும் இந்த அமைச்சர்களே. வட மாகாணசபை அமைக்கப்பட்ட பின்னர் அது தற்போது அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. நாட்டின் சட்டத்துக்கு எதிராக வட மாகாணசபை தீர்மானங்களை நிறைவேற்றும்போது இந்த அமைச்சர்கள் மெளனம் காத்து வருகின்றனர்.
சட்டத்துக்கு முரணான பிரேரணைகளே வட மாகாண சபையில் நிறைவேற்றப்படுகின்றன. இந்தியாவுக்கு அடிபணிந்து செல்லவேண்டிய தேவை இல்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, தமிழ் பிரிவினைவாத சக்திகளுடன் அதிகாரப் பகிர்வொன்றுக்குச் செல்ல வேண்டிய தேவை இல்லையென்றும் கூறினார்.

பயங்கரவாதிகள் விரும்பியதை தற்பொழுது அடைவதற்கு முயற்சிக்கும் சர்வதேச சக்திகளுக்கு எதிராக மக்கள் திரண்டெழவேண்டியதே தற்பொழுது நாட்டில் தேவையான விடயமாகும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு எமக்கு எதிராக நேரடியான பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது. இதற்காக பொதுச்சபையினதும் பாதுகாப்புச் சபையினதும் அங்கீகாரம் இருக்க வேண்டும். சில வேளை எமக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படுமானால் அதனை நடைமுறைப்படுத்த இலங்கையின் அங்கீகாரமும் இருக்க வேண்டும்.

நாட்டுக்கு நாடு தொடர்பாக தீர்மானம் எடுக்கலாம். அமெரிக்காவுக்கு தேவைப்படுமானால் எம்முடைய நாட்டைப் பற்றி தீர்மானம் எடுக்கலாம். இலங்கைக்கும் அவ்வாறே எந்த நாடு தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கலாம். என்றாலும் ஜெனீவா மாநாட்டுக்கு எமது நாடு தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு ஆளுமையில்லை. துறைமுக பெருந்தெருக்கள் கப்பல்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன,

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் எங்களுடைய நாட்டுக்கு பலாத்காரமாக திணிக்கப்பட்ட அரசியலமைப்பாகும். அதனை நடைமுறைப்படுத்தும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எந்தவொரு இனத்திற்கும் பிரச்சினை ஏற்பட இடமளிக்கக்கூடாது. குறிப்பாக மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரத்தை கொடுப்பது தொடர்பாக மக்கள் மத்தியில் சந்தேக உணர்வு உருவாகியுள்ளது. இதனால், எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படவுள்ள சகல இடங்களையும் மூடிவிட வேண்டும்.

13ஆவது அரசியலமைப்பு போன்ற குழப்பத்தில் உருவாக்கப்பட்ட யாப்பு தொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானங்களுக்கு வர வேண்டும். அதிகாரத்தை பரவலாக்கும் போது மேலும் பிரச்சினைகள் ஏற்படலாம். வடக்கில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி, தெற்கில் பிரச்சினையை ஏற்படுத்தத் தேவையில்லை. முழுமையான கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றி தேவையற்ற பிரச்சினைகள் உருவாகுவதை தவிர்க்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு என்பது சொல்வதை செய்யும், செய்வதை சொல்லும் அரசாங்கமாகும்.


புலிகள்  அமைப்பிற்கு உதவியளித்து செய்யமுடியாதவற்றை ஜெனீவாவின் மூலம் செய்வதற்கு சர்வதேசம் முயற்சி செய்கிறது. அரசாங்கம் என்ற வகையில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவை எதிர்கொள்ள நாம் தயார். அமைச்சரவை என்ற வகையில் நாம் கூட்டுப் பொறுப்பை எதிர்கொள்ள வேண்டும். தனி நபர்களாக, குழுக்களாக ஒவ்வொரு முறையும் கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமல்ல. அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் கூட்டுப்பொறுப்பான பேச்சு வார்த்தைகளை நடத்தி அமைச்சரவைக் குழுவாக பேசுவதும், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதும் சாலப் பொத்தமானதாகும்.  

No comments:

Post a Comment