Tuesday, January 21, 2014

இலங்கை அமைதியானால் தமிழகம் தொழில் வளம் பெறும்': அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன் பேச்சு!

Tuesday, January 21, 2014
மதுரை::இலங்கையில் அமைதி ஏற்பட்டால், தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படும்'' என, மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பேசினார்.

மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், 'மாற்று வழியில் உற்பத்தி செய்யப்படும் மணல்' குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பேசியதாவது: இந்தியாவில் ரூ.500 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்து, அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் நகரத்திற்கு, 'ஆற்றல்சார் நகரம்' (சென்டர் பார் எக்சலன்ஸி) என்ற சான்று வழங்கப்படுகிறது.
 
தமிழகத்தில் முதன்முறையாக தூத்துக்குடி அறிவிக்கப்படுகிறது. இங்கு தொழில் துவங்குவோருக்கு வரிச்சலுகை உட்பட தொழில் சலுகைகள் வழங்கப்படும். பொள்ளாச்சியையும் இதில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரையும் இந்த பட்டியலில் இடம்பெற முடியும். சர்வதேச விமான நிலையத்தால், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் புளூமெட்டல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கான பாறைகள் இங்கு அதிகம் உள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக, இலங்கையுடனான உறவு முரண்பாடாக உள்ளது.
 
இதனால், தென்மாவட்ட கடற்கரை பகுதியை வாங்கிய மும்பையை சேர்ந்தவர்கள், அங்கு முதலீடு செய்வதை குறைத்துக் கொண்டனர். இங்கு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பின்றி, ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வெளிநாடு சென்றுவிடுகின்றனர். அவர்களை மீண்டும், இங்கு அழைத்து வர வேண்டும். இலங்கையில் அமைதி ஏற்படும்போது தான், தென்மாவட்டங்களில் தொழில் வளம் ஏற்படும். ஜப்பான், தைவான் நாட்டவர்கள் இங்கு முதலீடு செய்ய தயாராக உள்ளனர்.
 
 இதற்காக சென்னை முதல் கன்னியாகுமரி வரையும், கொச்சி முதல் ஓசூர் வரையும் 'இண்டஸ்ட்ரியல் காரிடார்' உருவாக்கப்பட உள்ளது. தமிழக அரசின் உதவியுடன் 'தேசிய முதலீடு மற்றும் உற்பத்திக்கான மண்டலம்' (நிம்ஸ்) என்ற 100 புதிய நகரங்கள் உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், முதுநிலை தலைவர் ரத்தினவேலு, செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் ஜீயர்பாபு, இந்திய தொழிற் கூட்டமைப்பு தலைவர் கதிர்காமநாதன், இணைத்தலைவர் ரோஹிணிஸ்ரீதர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment