Monday, December 09, 2013
இலங்கை::வட மாகாண சபைக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம் மாகாண முதல மைச்சர் சி. வி. விக்னேஸ்வர னினால் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பில் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய முதலமைச்சர் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான மாகாண நிதி நியதிச் சட்ட வரைவு ஆவணங்களில் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக முதலமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய நாளை நடைபெறவுள்ள வட மாகாண சபையின் கூட்டத்தின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது முதலாவதும், 2014ம் ஆண்டுக்குமான வரவு- செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து அங்கீகாரத்தை பெறவுள்ளார்.
நாயைய தினம் வரவு- செலவுத் திட்டத்திற்கான விவாதத்தை தொடர்ந்து இது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய வட மாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடாக சுமார் 19 ஆயிரத்து 481 மில்லியன் ரூபா நிதியை மத்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டுத் தொகையானது ஏனைய மாகாணங்களுக்கு அடுத்த ஆண்டுக்காக அரசாங்கம் வழங்கிய நிதி ஒதுக்கீட்டுத் தொகையை பார்க்கிலும் கூடுதல் தொகையாகும் என வடமாகாண சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி மாகாண சபையின் கீழ் செயற்படும் 30 ஆயிரம் ஆளணியினரின் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளுக்கும் இதில் மாகாண நிதி நியதிச் சட்டத்திற்கு அமைய 15 ஆயிரத்து 526 மில்லியன் ரூபா மாகாண சபையின் நிதி ஏற்பாடுகள் கீழ் வழங்கப்படவுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் திணைக்களங்களின் செலவுகளுக்கும் (மீண்டெழும் செலவீனங்களுக்காக) சுமார் 11500 மில்லியன் ரூபா நிதியையும், வருமானமாக 2150 மில்லியன் ரூபா நிதியும், மூலதனச் செலவுகளுக்கான உதவித்தொகையாக 1315 மில்லியன் ரூபாவும் விஷேட வேலைத் திட்டங்களுக்கு 4516 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments:
Post a Comment