Sunday, December 15, 2013
இலங்கை::இலங்கை இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
போரின் போது அப்பாவி தமிழ் மக்களை கொலை செய்யும் எண்ணம் இராணுவத்தினருக்கு இருக்கவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இராணுவத்தினருக்கு தமிழ் மக்களை கொலை செய்ய வேண்டும் என்ற தேவை இருந்திருக்குமாயின் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த ஆயிரக்கணக்கான புலிகளின் உறுப்பினர்களை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அகாஷி சந்தித்த போதே அமைச்சர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்துவது நியாயமற்றது. தவறான தகவல்களை கொண்டே இந்த போர் குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் இதுவரை அவர்களின் சொந்த காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
1971 ஆம் ஆண்டு வடக்கில் 20 ஆயிரம் சிங்களவர்கள் வாழ்ந்து வந்தனர். எனினும் தற்போது 800 பேர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
30 வருடகால போரில் வடக்கு கிழக்கில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சிங்களவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment