Monday, December 30, 2013

மீனவர்கள் மீண்டும் சிறைபிடிப்பு: இலங்கைக்கு ஜி.கே.வாசன் கண்டனம்!

Monday, December 30, 2013
புதுச்சேரி::மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தஞ்சாவூருக்கு சென்று விட்டு சென்னை திரும்பும் வழியில் இரவு புதுவையில் தங்கினார். இன்று காலை ஜி.கே.வாசன் மத்திய மந்திரி நாராயணசாமியை அவரது வீட்டில் சந்தித்தார். சுமார் 30 நிமிடம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
பின்னர் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறை பிடித்துள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தமிழக மற்றும் புதுவை மீனவர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக மத்திய மந்திரி நாராயணசாமி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். வருகிற ஜனவரி மாதம் மத்திய அரசு டெல்லியில் இருநாட்டு மீனவ பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் நிலவி வருகிறதே?
பதில்: அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறோம். இதனால் கட்சிக்குள் சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். இதனை கட்சி தலைமை பார்த்து கொள்ளும்.

கேள்வி: வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம் பெறுமா?

பதில்: கடந்த 2004 மற்றும் 2009–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சியையும் அமைத்தது. அதேபோல் வருகிற 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் வெற்றி கூட்டணி அமையும். இந்த கூட்டணி தமிழகம்–புதுவை மட்டுமின்றி நாடுமுழுவதும் அதிக இடங்களை கைப்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
 

tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment