Tuesday 10 December 2013
சென்னை::பா.ஜனதா கட்சி 4 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிக்கனியை பறித்தது கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட இந்த தேர்தலில் பா.ஜனதா பெற்றுள்ள வெற்றி பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக மோடி அலை நாடு முழுவதும் வீசுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
எனவே மாநில கட்சிகளும் பா.ஜனதாவுடன் கைகோர்க்க தயாராகி வருகின்றன. தமிழகத்திலும், திருச்சியில் நடந்த நரேந்திரமோடி கூட்டத்துக்கு பிறகு பா.ஜனதாவின் செல்வாக்கு ஓரளவு வளர்ந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை ஏதாவது ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் மாநில கட்சிகளுக்கு இருக்கிறது. அதேபோல் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் தேசிய கட்சிகளுக்கும் இருக்கிறது.
நம்மோடு கூட்டணி அமைக்க எந்த கட்சி வரும்? என்ற ஏக்கத்தில் இருந்த பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க பல கட்சிகள் முன் வந்திருப்பது பா.ஜனதாவினரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கூட்டணியை உருவாக்குவதற்கான ஆயத்த பணிகளில் தமிழக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க தமிழருவி மணியன் முயற்சி மேற்கொண்டுள்ளார். அவர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இரு கட்சிகளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற விருப்பம் தெரிவித்து இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த கூட்டணியை வலுப்படுத்த தே.மு.தி.க.வையும் வளைத்து போட முயற்சிகள் நடக்கிறது. ஆனால் தே.மு. தி.க.விடம் இருந்து உறுதியான பதில் இதுவரை வரவில்லை என்று கூறப்படுகிறது.
திராவிட கட்சிகளும், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க டெல்லி தலைவர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்கள் இதுபற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்?வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது பற்றி கவனமாகவும், நுணுக்கமாகவும் ஆய்வு செய்தே கட்சி மேலிடம் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்க்கலாம் என்று முடிவு செய்யும் என்று பா.ஜனதா மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


No comments:
Post a Comment