Tuesday, December 17, 2013

இந்திய பெண் தூதர் கைதுக்கு பதிலடி: அமெரிக்க தூதரக அதிகாரிகள் அடையாள அட்டைகளை ஒப்படைக்க உத்தரவு!

Tuesday, December 17, 2013
புதுடெல்லி::இந்திய பெண் தூதர் கைது செய்யப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க தூதரக அதிகாரிகள், அடையாள அட்டைகள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க்கில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக இருக்கும் தேவயானி கோபர்கடே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசா மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் இயங்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் தங்களது நாட்டில் வழங்கப்பட்டுள்ள அனைத்து அடையாள அட்டைகளையும் மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவில் பணிபுரியும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அடையாள அட்டைகள் தாக்கல் செய்வதில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்தியா வந்துள்ள அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேவை இன்று சந்திப்பதாக இருந்தது. ஆனால் அந்த சந்திப்பு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. உள்துறை மந்திரி ஷிண்டே பாராளுமன்ற பணிகளில் மிகவும் பிசியாக இருப்பதாகவும், அதனால் அக்குழுவை சந்திக்க முடியவில்லை என்றும் காரணம் கூறப்பட்டுள்ளது. ஆனால் நேற்று மாலை ஷிண்டேயின் அலுவலக பணி பட்டியலில் அமெரிக்க குழுவை இன்று சந்திப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment