Tuesday, December 17, 2013

தென் ஆப்ரிக்க நாடாளுமன்றத்தில் 9 மீட்டர் உயர மண்டேலா சிலை நிறுவப்பட்டது!

Tuesday, December 17, 2013
ஜோகன்னஸ்பர்க்::நிறவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலாவுக்கு, அவரது இறுதி சடங்கு முடிந்த 2வது நாளில் தென் ஆப்ரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் 9 மீட்டர் வெண்கல சிலை நிறுவப்பட்டது.
 
சிலையை அதிபர் ஜாக்கோப் ஜூமா திறந்து வைத்தார்.தென் ஆப்ரிக்காவின் தேச தந்தையும், நிறவெறிக்கு எதிராக போராடியவருமான, முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில், டிசம்பர் 6ம் தேதி காலமானார். நேற்று முன்தினம் மண்டேலாவின் உடல் கிழக்கு கேப்டவுனில் உள்ள அவரது சொந்த ஊரான குனுவுக்கு அரசு மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டது.
 
பின்னர் 21 குண்டுகள் முழங்க அவரது வீட்டின் அருகிலேயே இறுதி சடங்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் கலந்து கொண்டு மண்டேலாவுக்கு பிரியாவிடை கொடுத்தனர். தங்களது விடுதலைக்காக போராடிய மண்டேலாவை நினைத்து தென் ஆப்ரிக்க மக்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். அவரை கவுரவிக்கும் வகையில் இறுதி சடங்கு முடிந்த 2ம் நாளிலேயே தென் ஆப்ரிக்க நாடாளுமன்றத்தில் மண்டேலா சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 
அமைதியை போற்றும் வகையில் 2 கைகளை விரித்து மண்டேலா நிற்கும் நிலையில் உள்ள 9 மீட்டர் உயர சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் எடை 4.5 டன் உள்ளது. வெண்கல சிலையை அதிபர் ஜாக்கோப் ஜூமா திறந்து வைத்தார். நேற்று தான் எங்கள் தந்தையை குனுவில் அமைதி பெற செய்தோம். அவர் இன்று அந்த அமைதியை குறிக்கும் வகையில் எங்கள் முன்பாக எழுந்து நிற்கிறார். அவர் என்றென்றும் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் சின்னமாக இருப்பார் என சிலை திறப்பு நிகழ்ச்சியின் போது அதிபர் ஜாக்கோப் ஜூமா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment