Saturday, November 30, 2013

பாராளுமன்றத்தில் நம்பிக்கை வைக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் வகையிலேயே கருத்துக்களை வெளியிடுகின்றனர்: கெஹெலிய ரம்புக்வெல்ல!

Saturday, November 30, 2013
இலங்கை::பாராளுமன்றத்தை மலினப்படு த்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடர்ச்சியான செயல் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதன் ஒரு நடவடிக்கையாகவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அக்கட்சி நிராகரித்து வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்குச் சுதந்திரமில்லை என்று கூறும் சம்பந்தன் எம்.பி. அந்தக் கூற்றை எங்கிருந்து கொண்டு வெளியிட்டார் என கேட்க விரும்புகிறேன். பாராளுமன்றத்திலிருந்து கொண்டே இக்கூற்றை வெளியிடும் அவரின் ஏனைய கூற்றுக்களும் ஏற்கக் கூடியதல்ல என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவு  செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. இரா. சம்பந்தன் பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலம் தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்பது நம்பிக்கையற்றது என்றும் அக்குழு காலத்தைக் கடத்தும் செயல் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார். சம்பந்தன் எம்.பி.யின் கூற்றுக்கள் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எக்காலத்திலும் உயர் கெளரவம் மிக்க பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டு வந்துள்ளனர். அதன் ஒரு அம்சமாகவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அவர்கள் நிராகரித்துஅக்குழுவிற்கு சமுகம் தருவதை தவிர்த்து வருகின்றனர்.

பாராளுமன்றம் என்பது உயர் கெளரவம் மிக்கதும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்குப் பொருத்தமான இடம் என்பதுமே அரசாங்கத்தின் நம்பிக்கை. அந்த வகையிலேயே பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தில் நம்பிக்கை வைக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் வகையிலேயே கருத்துக்களை வெளியிடுகின்றனர். அதன் ஒரு அம்சமாகவே சம்பந்தன் எம்.பி.யின் கூற்றும் அமைந்துள்ளது.

நாட்டில் சகல இன, மத, பிரதேச மக்களும் சமமாகவே மதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான தேவைகள் அனைத்தையும் சமமாகவே அரசாங்கம் வழங்கி வருகிறது. எந்த விதத்திலும் எத்தகைய உரிமையும் மறுக்கப்படவில்லை.  என்பதை அனைவரும் அறிவர். இந்நிலையில் சம்பந்தன் எம்.பியின் கூற்று புதிதல்ல. பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment