Tuesday, October 8, 2013

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றது

Tuesday, October 08, 2013
இலங்கை::இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில்  நேற்று மாலை கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றது.
 
சல்மான் குர்ஷித்துடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்திருந்தது. இதன்போது எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட குர்ஷித் நம்பிக்கை தரும் வகையிலான பதில்களை எமக்கு வழங்கியிருந்தார். அது மாத்திரமல்லாது அதிகாரப்பகிர்வு தொடர்பில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன.

வடக்கு மக்களை பொறுத்தவரையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அரசியல் ரீதியில் மாத்திரமின்றி முழு அளவில் அநாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். ஆகவேதான் நாம் எமது மக்களுக்கான கோரிக்கையினை முன்வைத்திருந்தோம். அந்தக் கோரிக்கை மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனால் எமது மக்கள் நம்பிக்கையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து பாரிய வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

எமது தேர்தல் விஞ்ஞாபனமென்பது தற்போது பிறந்திருக்கும் குழந்தையாக இருக்கின்றது. அந்தக் குழந்தை இன்னும் வளரவண்டியும் உள்ளது. ஆகவே அந்த குழந்தை வளர்வதற்கு வழிவிட வேண்டியது அவசியமாகும். எமது மக்களின் சுதந்திரத்தையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாப்பதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம். அது ஈடேறுவதற்கு இந்தியா வழிவகுக்க வேண்டும். அதேபோன்று எமது கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு ஒத்துழைப்புக்களை நல்கவேண்டியதும் அவசியமாகும் எனக் குறிப்பிட்டார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடனான சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இந்தச் சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகளும் இன்று மாலை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment