Wednesday, October 23, 2013

மலேசியா இலங்கையில் 1.4 மில். டொலர் முதலீடு மலேசியப் பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, October 23, 2013
இலங்கை::மலேசியாவின் பிரதம மந்திரி நஜீப் ரசாக் கோலாலம்பூரில் உள்ள அந்நாட்டு பாராளுமன்றக் கட்டிடத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து நடத்திய கலந்துரையாடலில் பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தில் நடைமுறைப்படுத்தக் கூடிய செயற்பாடுகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்துவது அவசியம் என்றும் தாம் இவ்வுச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியுடன் சமூகத்தின் பங்களிப்பு பாராட்டக் கூடிய விடயம் என்றும் மலேசிய பிரதம மந்திரி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது வர்த்தக பேரவைக் கூட்டம் எவ்விதம் நடத்தப்படும் என்பதை அமைச்சர் பீரிஸ் மலேசியப் பிரதம மந்திரிக்கு விளக்கிக் கூறினார்.
 
இந்த வர்த்தகப் பேரவையில் 460 வெளிநாட்டு பிரதிநிதிகளும் அதே அளவிலான இலங்கையின் வர்த்தகப் பிரமுகர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள். ஹம்பாந்தோட்டையில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் கலந்து கொள்வார்.மலேசிய வர்த்தக துறைமுகங்களுக்கு இலங்கையின் வர்த்தக மற்றும் முதலீடுகளில் ஈடுபடுவதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் பாரிய வசதிகளுக்கும் மலேசியப் பிரதம மந்திரி நன்றி தெரிவித்தார். தொழில் நுட்ப துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு மலேசியாவின் பங்களிப்பு அவசியம் என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இச் சந்திப்பின் போது கேட்டுக் கொண்டார்.
 
இப்போது மலேசியா இலங்கையின் மிகப்பெரிய முதலீடு செய்யும் ஒரு நாடாக விளங்குகிறது என்றும் மலேசியா தற்போது 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையில் முதலீடு செய்து இருப்பது குறித்து தான் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் மலேசியப் பிரதம மந்திரி இச் சந்திப்பின் போது தெரிவித்தார். மலேசிய நிறுவனங்கள் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கும் உல்லாசப் பிரயாணத் துறைக்கும், விவசாயத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துவருவது குறித்தும் நன்றி தெரிவித்தார்.
 
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை 850 மில்லியன் டொலர்களில் இருந்து அதிகரிப்பது பற்றியும் இருவரும் கலந்துரையாடினார்கள்.மலேசியாவுக்கான பேராசிரியர் பீரிஸின் இரண்டு நாள் விஜயத்தின் போது அவர் அந்நாட்டின் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் டாடோ முஸ்தபா உடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

No comments:

Post a Comment