Wednesday, September 18, 2013

வாஷிங்டன் கடற்படை தள துப்பாக்கி சூட்டில் இந்தியர் உள்ளிட்ட 12 பேர் பலி!

Wednesday, September 18, 2013
வாஷிங்டன்::அமெரிக்காவின், வாஷிங்டன் கடற்படை தளத்தில், 12 பேரை சுட்டு கொன்ற நபர், முன்னாள் கடற்படை வீரர் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், வெள்ளை மாளிகைக்கு, அரை கி.மீ.,தொலைவில், கடற்படை தளம் உள்ளது. இந்த தளத்தில் கப்பல்கள் பழுது பார்க்கும் பணி உள்ளிட்டவை நடக்கின்றன. ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர்.
நேற்று முன்தினம், ஆரோன் அலெக்சிஸ், 34 என்ற நபர், கடற்படை தள அலுவலக மாடியின் பால்கனியில் நின்ற படி, கீழே இருந்த பணியாளர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் இந்தியர், விஷ்ணு பண்டிட், 61, உள்ளிட்ட, 12 பேர், பலியாயினர். ஒரு போலீஸ்காரர் உள்பட, எட்டு பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு படையினரின் தாக்குதலில், அலெக்சிசும் கொல்லப்பட்டார். ஆரோன் அலெக்சிஸ், சக ஊழியர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வெள்ளை மாளிகையில், தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில், நேற்று நடைபெற இருந்த இசை நிகழ்ச்சியை, அதிபர் ஒபாமா ரத்து செய்தார்.

No comments:

Post a Comment