Tuesday, July 16, 2013

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் 53 நாடுகளினதும் அரச தலைவர்கள் கலந்துகொள்வார்கள்: ஜீ.எல். பீரிஸ்!

Tuesday, July 16, 2013
இலங்கை::எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் 53 நாடுகளினதும் அரச தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு இருக்கின்றது.இந்த மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டோம் என்று எ ந்தவொரு நாடும் இதுவரை அறிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு நடைபெறுவது என்பது பாரிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். யுத்தத்தின் பின்னரான இலங்கையின் கள நிலைமையை காண்பதற்கு உலகத் தலைவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் இதன்மூலம் கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பொதுநலவாய நாடுகளுக்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல, அனுர பிரியதர்ஷன யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம, மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் செய்தியாளர் சந்திப்பில் மேலும் கூறியதாவது,

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறுவது என்பது நாம் பெருமையடையக்கூடிய விடயமாகும். நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் ஊடாக எமது நாடு பாரிய முக்கியத்துவமான நிலையை சர்வதேச மட்டத்தில் அடையவுள்ளது. குறிப்பாக அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கையே பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தை வகிக்கவுள்ளது.

இது எவ்வித சந்தேகமுமின்றி சர்வதேச மட்டத்தில் எமக்கு சிறந்த முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் மாநாடாகும். 1976 ஆம் ஆண்டு அணிசேரா நாடுகள் மாநாடு இந்த நாட்டில் நடைபெற்றதன் பின்னர் நடைபெறும் விசாலமான மாநாடு பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு என்றே கூறலாம். அத்துடன் 24 வருடங்களின் பின்னர் ஆசிய நாடு ஒன்றுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை தொடர்பில் நாம் பெருமையடையலாம்.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அரசாங்க மட்டத்தில் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment