Sunday, March 17, 2013

தி.மு.க., மிரட்டலை, காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

Sunday, March 17, 2013
புதுடில்லி::இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்கா விட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்இருந்து, தி.மு.க., விலகும் சூழ்நிலை உருவாகலாம்' என, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி விடுத்த மிரட்டலை, காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றாலும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவு தொடரும் வரை, அரசுக்கு ஆபத்தில்லை என்பதால், மிகுந்த நம்பிக்கையுடன், காங்., உள்ளது.

போர் குற்றங்கள்: இலங்கையில்,  புலிகளுடன் நடந்த கடைசி கட்ட போரின் போது, பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கமிஷனில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. "இந்தத் தீர்மானத்தை, வலுவான திருத்தங்களுடன், இந்தியா ஆதரிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில், மன்மோகன் சிங் அரசு முடிவெடுக்கவில்லை எனில், மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலக நேரிடும்' என, நேற்று முன்தினம், அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார். அதனால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்றால், தேசிய அரசியலில் நெருக்கடி ஏற்படும் என்றும், மத்திய அரசு கவிழும் அபாயம் உருவாகும் என்றும், வதந்திகள் பரவின. ஆனால், உண்மையில் நிலைமை வேறாக உள்ளது. லோக்சபாவைப் பொறுத்தவரை, மொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 544. இதில், தனிப்பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க, 273 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. காங்கிரசுக்கு, 206 எம்.பி.,க்கள் இருந்தனர். சமீபத்தில், குஜராத்தைச் சேர்ந்த, ஒரு எம்.பி., காலமாகி விட்டதால், பலம் 205 ஆக குறைந்துள்ளது.

எந்த பயமும் இல்லை: மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி

அரசுக்கு, தி.மு.க., இல்லாமல், பிற கட்சிகள் சார்பில் ஆதரவு அளிக்கும் எம்.பி.,க்கள், 68 பேர். இதுதவிர, ஒன்பது சுயேச்சை, எம்.பி.,க்களும், ஆதரவு தருகின்றனர். இந்த கணக்குப்படி பார்த்தால், மன்மோகன் அரசுக்கு, ஆதரவு தரும் எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 278. ஒருவேளை, தி.மு.க.,வின், 18 மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒருவர் என, 19 எம்.பி.,க்களும், தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றாலும், மத்திய அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் தப்பிவிடும். அதற்கு காரணம், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள் தரும் ஆதரவே. இந்த இரு கட்சிகளுக்கும் சேர்த்து, மொத்தம், 43 (22+21) எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த கட்சிகளின் ஆதரவு, எந்த சூழ்நிலையிலும் தொடரும் என்பதால், "அரசிலிருந்து விலகுவோம்' என, தி.மு.க., விடுத்த மிரட்டலை, மத்திய கூட்டணி அரசுக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாயாவதியோ அல்லது முலாயம் சிங்கோ, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற திட்டமிட்டால் மட்டுமே, நிலைமை வேறு விதமாக மாறும்; அரசு கவிழும் நிலைமை உருவாகலாம். அதுவரை எந்தப் பயமும் இல்லை என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் முடிவு எடுப்பார்': பிரதமர் அலுவலக

விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர், நாராயணசாமி கூறியதாவது: தமிழக மக்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை பொறுத்தவரை, இலங்கை தமிழர் பிரச்னை, உணர்வுப்பூர்வமானது. இந்த உணர்வுகளைத் தான், தி.மு.க.,வும், அதன் தலைமையும் பிரதிபலித்துள்ளன. இந்த பிரச்னை பற்றிய அனைத்து விஷயங்களையும், பிரதமர் மன்மோகன் சிங் பரிசீலித்து, முடிவை அறிவிப்பார். "இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் விஷயத்தில், மத்திய அரசு உறுதியாக உள்ளது' என, பிரதமர், ஏற்கனவே, பார்லிமென்டில் தெரிவித்துள்ளார். இவ்வாறு, நாராயணசாமி கூறினார்.

No comments:

Post a Comment