Monday, March 4, 2013

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் புலிகளின் ஆதரவாளர் ஒருவர் தீக்குளிப்பு!

Monday, March 04, 2013
கடலூர்::இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த புலிகளின் ஆதரவாளர்  மணி என்பவர் தீக்குளித்தார். அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் இயக்குநர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

இன்று பகல் 12 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் கேனுடன் வந்த அவர், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியபடியே தமத் உடலுக்கு தீ வைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் தீப் பற்றி எரிந்த நிலையில் அங்கிருந்தோர் தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மிகவும் ஆபத்தான நிலைமையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

உயிருக்குப் போராடிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மணி, தனித் தமிழீழம் அமைய வேண்டும்- இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக இந்த உலகம் அறிவிக்க வேண்டும். இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும்.

இதேபோல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிதி கிடைக்காமல் ஊழல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துவிட்டனர். இதனால் ஊழலற்ற இந்தியா மலர வேண்டும். அன்னா ஹசாரே, அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரது வலுவான லோக்பால் மசோதா கோரிக்கை நிறைவேறவும் எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும் என்றார்.

கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு நாம் தமிழர் கட்சியினர் உடனிருந்து சிகிச்சைகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment