டாக்கா::வங்கதேச சுதந்திரப் போராட்டம் நடைபெற்றபோது, போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. போர்க்குற்ற வழக்கில் தொடர்புடைய ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் தெல்வார் ஹீனகன் சயீதி (73) உள்பட 3 பேருக்கு சமீபத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை கண்டித்தும், அவர்கள் மீதான வழக்குகளை கைவிடக் கோரியும் ஜமாத் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு ஏராளமானோர் பலியாகி உள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3 நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். அங்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசினார். மேலும், முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி தலைவருமான பேகம் கலிதா ஜியாவை நாளை (5-ந்தேதி) சந்திப்பதாக இருந்தது. ஆனால், கலவரம் தீவிரமடைந்துள்ள நிலையில் இவர்களது சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்றும் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். உல்லப்பாராவில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டான். கலலோவா மாநகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பிற்பகல் டாக்காவில் சோனார் கான் பகுதியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தங்கியிருந்த ஓட்டல் அருகே குண்டுவெடித்தது. அப்போது பிரணாப் ஓட்டலில் இருந்தாரா? என்பது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. நாட்டு வெடிகுண்டாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment