Monday, February 04, 2013
சென்னை::விஸ்வரூபம் விவாரம் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கமல் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் இன்று வாபஸ் பெறப்பட்டது. முத்தரப்பு பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, 7 காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டதை அடுத்து, ‘விஸ்வரூபம்‘ வெளியாவதில் இருந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. கலெக்டர்கள் விதித்த 144 தடையும் நீக்கப்பட்டது. இந்த நிலையில், படம் வரும் 8ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று தெரிகிறது. ‘விஸ்வரூபம்‘ படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. கடந்த மாதம் 25,ம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய படத்துக்கு தமிழக அரசு, 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதித்தது.
இதற்கு எதிராக கமல் வழக்குத் தொடர்ந்தார். தடையை நீக்கி கோர்ட் உத்தரவிட்டது. அரசு செய்த அப்பீலில் 2 நீதிபதிகள் பெஞ்ச்சில் மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம் அமைப்புகளுடன் கமல் பேசி சமரசம் செய்தால் படத்தை வெளியிட அரசு உதவும் என்று ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. படத்தில் இடம்பெறும் ஆட்சேபகரமான 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதித்ததால் பிரச்னை முடிவுக்கு வந்தது. சில காட்சிகளில் ஒலியை மட்டும் அகற்ற ஒப்புக் கொண்டார்.
உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கமல் தொடர்ந்த வழக்கு இன்று வாபஸ் பெறப்பட்டது. முஸ்லிம் அமைப்பினரும் தங்கள் வழக்குகளை வாபஸ் பெறுகிறார்கள். இந்நிலையில் படத்துக்கு கலெக்டர்கள் பிறப்பித்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 524 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment