Tuesday, January 8, 2013

நாடாளுமன்ற ஒழுக்க கோவையில் இணைக்கப்பட்டதன் பின்னர் அதனை மீண்டும் வேறு திசைக்கு திருப்ப மூன்றாம் தரப்பினருக்கு அதிகாரம் இல்லை - பிரதி சபாநாயகர்!

Tuesday, January 08, 2013
இலங்கை::நாடாளுமன்ற ஒழுக்க கோவையில் இணைக்கப்பட்டதன் பின்னர் அதனை மீண்டும் வேறு திசைக்கு திருப்ப மூன்றாம் தரப்பினருக்கு அதிகாரம் இல்லை என்று பிரதி சபாநாயகர்
குறிப்பிட்டுள்ளார்.
பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை தொடர்பில் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதம நீதியசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை ரத்து செய்து ரிட் உத்தரவினை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று வெளியிட்டது.

குற்ற பிரேரணை அறிக்கை தொடர்பாக பிரதம நீதியரசர் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், இது தொடர்பில் பல்வேறு மட்டத்தினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றவியல் பிரேரணை அறிக்கையை நீக்குமாறு தாக்கல் செய்த மனு மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வெளியானதும், அது தொடர்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நாடாளுமன்றம் செயற்படும் என்று தாம் கருதுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன், சட்டத்தரணி பீ. மானவது கருத்து தெரிவிக்கையில் மேன்முறையீட்டு நீதினமன்றத்தின் இந்த தீர்ப்பானது நாடாளுமன்ற தெரிவுக்குழு தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் பிரச்சினையை ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டார்.

குற்றவியல் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று பிரதியமைச்சர் லலித் திஸாநாயக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாடு நாளைய தினம் வெளியிடப்படும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் கோங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினம் கூடி ஆராய்ந்த போது தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே நாளைய தினம் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment