Tuesday, January 29, 2013

கச்ச தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?

Tuesday, January 29, 2013
ராமேஸ்வரம்::கச்சதீவு அருகே மீண்டும் தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை மீனவர்கள் தொண்டி கடலில் மீன் பிடித்து வந்தனர். அங்கு மீன்கள் சரியாக கிடைக்காததால் கச்சத்தீவு அருகே படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் வலைகளை வீசி மீன்கள் பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு குட்டி கப்பல்களில் வந்தனர். கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை பார்த்து ஏன்? இங்கு மீன்பிடிக்க வந்தீர்கள் என்று கூறி தாக்கினர்.

மேலும் அவர்கள் கடலில் வீசி இருந்த வலைகளை அறுத்து எறிந்து சேதப்படுத்தினர்.

மீனவர்கள் பிடித்து வைத்து இருந்த மீன்களையும் கடலில் வீசி எறிந்தனர். இதனால் பயந்துபோன மீனவர்கள் அங்கு இருந்த படகுகளில் தப்பி கரை திரும்பினர்.

தாக்கப்பட்ட மீனவர்கள் சம்பவம் பற்றி கூறுகையில், "நாங்கள் இந்திய எல்லைக்குள்தான் மீன்பிடித்து கொண்டு இருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்து காட்டு மிராண்டித்தனமாக எங்களை தாக்கினர். நாங்கள் பிடித்து வைத்து இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்களையும் கடலில் அள்ளி வீசி எங்களை மிரட்டினர்.

மீன்களை கடலில் வீசியதால் வெறும் கையுடன் கரை திரும்பினோம். அடிக்கடி தொல்லை கொடுத்து வரும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை மத்திய அரசு தடுத்து மீனவர்களை பாதுகாக்க வேண்டும்." என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment