Wednesday, November 28, 2012

தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைக்குமா? : பெங்களூரில் நாளை மாலை ஜெயலலிதா ஷெட்டர் பேச்சு!

Wednesday, November 28, 2012
சென்னை::சுப்ரீம் கோர்ட் ஆலோசனைப்படி, காவிரி நதிநீர் பிரச்னை குறித்து தமிழக, கர்நாடக முதல்வர்கள் நாளை மாலை பெங்களூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போனது. வடகிழக்கு பருவ மழையாவது கை கொடுக்கும் என காவிரி டெல்டா விவசாயிகள் நம்பியிருந்தனர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான அணைகள் நீரின்றி காணப்படுகிறது. மேட்டூர் அணையிலும் குறைந்த நீர்தான் இருப்பு உள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதியில் சம்பா பயிர்கள் நீரின்றி அழியும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்துக்கு தரவேண்டிய 52.8 டிஎம்சி நீரை உடனடியாக கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் லோக்கூர் நேற்று முன்தினம் விசாரித்தனர். ‘இரு மாநில முதல்வர்களும் காவிரி நீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி செய்யுங்கள்’ என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையேற்று, கர்நாடக முதல்வரை சந்தித்து பேச தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சுப்ரீம் கோர்ட் ஆலோசனைப்படி முதல்வர் ஜெயலலிதா 29ம் தேதி பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கர்நாடக சட்ட அமைச்சர் சுரேஷ்குமார் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், ‘தமிழக முதல்வர் விருப்பப்படி வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஷெட்டர் ஒப்புக்கொண்டால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பேச்சுவார்த்தை எப்போது என்பது புதன்கிழமை (இன்று) உறுதியாகும்’ என தெரிவித்தார்.

இந்நிலையில், இரு மாநில முதல்வர்களும் காவிரி நதி நீர் பிரச்னை குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கான இடம், நேரம் குறித்து இன்று மாலை 5 மணிக்கு உறுதி செய்து அறிவிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நாளை மாலை 3 மணிக்கு பெங்களூரில் உள்ள ஐடிசி கார்டீனியா ஓட்டலில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் வரை பாதுகாப்பு அளிப்பது குறித்து போலீஸ் உயரதிகாரிகளுடன் பெங்களூர் போலீஸ் கமிஷனர் இன்று ஆலோசனை நடத்தினார்.

No comments:

Post a Comment