Thursday, November 29, 2012

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கிய ஆவணங்களின் பிரதிகளை வழங்குமாறு அறிவிப்பு!

Thursday, November 29, 2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமை தொடர்பிலான ஆவணங்களின் பிரதிகளை அவருக்கு வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிவாளருக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சிசிர டி ஆப்ரூ மற்றும் சுனில் ராஜபக்ஸ ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

முன்னாள் இராணுவத் தளபதிக்கு மன்னிப்பு வழங்கியமை தொடர்பான ஆவணங்கள் வழக்கிற்கு முக்கியத்துவம் வாயந்தவையாக இருப்பதால் ஏற்கனவே நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை அந்த ஆவணங்கள் வழங்கப்படவில்லை என இதன்போது மனுதாரர் சார்பாக நீதிமன்றத்தில் பிரசன்னமாகிய சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களின் பிரதிகளை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment