Thursday, June 7, 2012

ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி!

Thursday, June 07, 2012
சென்னை::ஓராண்டுக்குப் பிறகு உயிரோடு இருந்தால் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி பரபரப்பாகப் பேசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் நேற்று கருணாநிதியை சந்தித்தனர். அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருக்கிறாரே, என்ன காரணம்?

கருணாநிதி: டெல்லிக்குப் போகக்கூடாதா என்ன?

கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?

கருணாநிதி: குடியரசுத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை ஏற்கனவே இங்கே வந்த மத்திய அமைச்சர் அந்தோணியிடம் விளக்கியிருக்கிறோம். உங்களிடமும் அதைப்பற்றி ஓரளவுக்கு சொல்லியிருக்கிறேன்.

கேள்வி: சேலத்தில் ராஜேந்திரன் அணியினருக்குத்தான் கட்சியில் பதவி தருவதாகவும் வீரபாண்டி அணியினரை புறக்கணிப்பதாகவும் சொல்கிறார்களே?

கருணாநிதி: அதெல்லாம் உங்கள் பத்திரிகை செய்திகள். நாட்டு நடப்பு அல்ல.

கேள்வி: கி.வீரமணி குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமை நிறுத்த வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?

கருணாநிதி: அது அவருடைய கருத்து. அதில் நான் அவருடன் முரண்படவில்லை.

கேள்வி: உள்கட்சித் தேர்தலில் நீங்கள் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவீர்களா?

கருணாநிதி: இப்போது தேர்தல் நடக்கவில்லை. இன்னும் ஓராண்டு இருக்கிறது.

கேள்வி: ஓராண்டுக்குப் பிறகு?

கருணாநிதி: ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன் என்றார் கருணாநிதி.

No comments:

Post a Comment