Thursday, May 31, 2012

இலங்கையின் மேம்பாட்டுக்காக தாய்லாந்து பூரண ஒத்துழைப்பு வழங்கும் - தாய்லாந்தின் பிரதமர் யின்லக் சினவத்ர!

Thursday,May,31,2012
இலங்கை::இலங்கையின் விவசாயம், கடற்றொழில், கல்வித் துறை மேம்பாட்டுக்காக தாய்லாந்து பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. தாய்லாந்தின் பிரதமர் யின்லக் சினவத்ர இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் பெளத்த மத, கலாசார செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டன.

இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுகளுக்கு இடையில் அரசியல் கலந்துரையாடல் தொடர்பான ஒப்பந்தமும் குற்றச் செயல்களைப் பொறுத்தவரை அந்நியோன்ய சட்டரீதியான ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் இருதரப்பு ஒப்பந்தத்தை வலுவூட்டுவதே மற்றைய ஒப்பந்தமாகும்.

இலங்கை ஜனாதிபதி, தாய்லாந்து பிரதமர் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்துக்கு நன்றி தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழித்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு அவதானம் கொண்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தக, முதலீட்டு மட்டங்களை மேம்படுத்துவதற்காக ஒன்றிணைந்த குழுவை அமைப்பதன் அவசியம் பற்றியும் இரு நாட்டுத் தலைவர்களும் ஆராய்ந்தனர்.

தாய்லாந்தில் விசேட துறை கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கியமை தொடர்பாகவும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் போது முக்கியமான துறைகள் பற்றி முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

மாணிக்கக்கல், ஆபரண துறை தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. விவசாய, கடற்றொழில் துறைகளில் தாய்லாந்து பெற்ற முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார். இலங்கைக்கு தேவைப்படும் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுத்தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கும் தாய்லாந்தின் பிரதமர் இணக்கம் தெரிவித்தார்.

இதற்காக ஒன்றிணைந்த குழுவை நியமிக்கவும் தாய்லாந்து பிரதமர் யோசனை தெரிவித்தார். இலங்கையில் நிர்மாண முதலீடு தொடர்பாக ஊக்குவிப்பதை குறிப்பிட்ட ஜனாதிபதி, உல்லாசக் கைத்தொழிலில் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி தொடர்பாகவும் விளக்கம் அளித்தார்.

வலய ஒத்துழைப்பு தொடர்பாக இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறினர். 2015-2017 மனித உரிமைகள் குழுவில் தாய்லாந்தின் பிரதிநிதித்துவத்துக்கு இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் செயற்பாடு தொடர்பாக கருத்துப் பரிமாறலில் ஒருமித்து செயற்படும் தேவை பற்றி இரு தலைவர்களும் அவதானம் செலுத்தினர்.

இலங்கையில் விஜயம் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி தாய்லாந்து பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். இதனை அவர் ஏற்றுக்கொண்டார். இலங்கையின் இயற்கை வனப்பு, இலங்கையர்களின் நல்லெண்ணம் போன்றவை தொடர்பாகவும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இலங்கையில் ஜனாதிபதி சமாதானத்தை உருவாக்கியமைக்காக அவர் மகிழ்வையும் தெரிவித்துக்கொண்டார். அமைச்சர் விமல் வீரவன்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதி செயலர் லலித் வீரதுங்க, வெளி உறவுகள் அமைச்சின் செயலர் கருணாதிலக்க அமுனுகம, தாய்லாந்தின் இலங்கை தூதுவர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் இந்த நிகழ்வுகளில் பங்கு கொண்டனர்.


நாட்டின் அபிவிருத்திக்கு இடையூறான சட்டங்களை தளர்த்த அரசு நடவடிக்கை

மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் தற்பொழுது இலங்கை அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய நாடாக இருக்கின்றது. அதன்மூலம் நாடு அபிவிருத்திப் பாதையில் பிரவேசித்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

முதலீட்டுக்கு உள்ள தடைகள் அகற்றப்பட்டு நடைமுறையில் இருந்த சட்டங்களும் ஒழுங்குவிதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.

நேற்று முன்தினம் (29) பிற்பகல் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உள்ள புனித ரெஜிஸ் ஹோட்டலில் அந்நாட்டில் வாழ்கின்ற இலங்கையர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பில் தாய்லாந்தில் தொழில் செய்கின்ற மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்ற பெரும் எண்ணிக்கையிலானவர்களும் அமைச்சர் விமல் வீரவன்ச, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிவேகத்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் 8 வீதமளவில் பேணக்கூடியதாக இருந்தது. இக்காலப்பகுதியில் அரசாங்கம் வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டங்களின் பெறுபேறாக அம்மாகாணத்தின் அபிவிருத்தி வேகம் 22% என்ற உயர்ந்த அளவில் உயர்ந்துள்ளது. உண்மை அதுவாக இருப்பினும் ஒருசில இணையத்தளங்கள் நாட்டின் உண்மை நிலையை திரிபுபடுத்தி சர்வதேசத்திற்கு தவறான பிரசாரத்தை முன்னெடுக்கின்றன.

உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் இலங்கையர்கள் இந்நிலையை சரியான முறையில் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்.

எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் நாட்டை நேசிக்க வேண்டும். எதிர்கால சந்ததியினர் பெருமைப்படக்கூடிய நாடொன்றை உருவாக்குவதே எமது அரசின் நோக்கம்.

வர்த்தகர்களுடன் சந்திப்பு தாய்லாந்தில் வாழ்கின்ற வர்த்தக சமூகத்தினரையும் தொழில் செய்கின்றவர்களையும் சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். உங்களிடமிருந்து பொருளாதாரத்திற்கு பெரும் சக்தி கிடைக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக நமது நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்தி இன்று அனைத்து இனங்களும் ஒரே நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சமுதாயம் ஒன்று உருவாகியிருக்கின்றது.

அன்று வடக்கிற்கும் கிழக்கிற்கும் போகப் பயந்தவர்கள் இன்று பயமின்றி வடக்கு கிழக்கிற்குப் போவது மாத்திரமின்றி அங்கிருப்பவர்களும் தென்னிலங்கைக்கு வரக்கூடியதாக இருக்கின்றது. நாட்டில் அந்த நிலைமையை உருவாக்கியதன் பின்னர் எமக்கிருக்கும் சவால் அன்று இடம்பெயர்ந்திருந்த சுமார் 3 இலட்சம் மக்களை மீளக் குடியமர்த்துவதாகும். அதற்கும் முன்பிருந்த சவால் இப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான கண்ணிவெடிகளை அகற்றுவதாகும்.

அக்கண்ணிவெடிகளை அகற்றி அவர்களை மீளக் குடியேற்றி அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கியிருக்கின்றோம். இன்னும் சுமார் 5000 பேர் மாத்திரமே குடியமர்த்தப்படவிருக்கின்றனர்.

நீர், மின்சாரம் மாத்திரமல்ல, அழிக்கப்பட்டிருந்த பாலங்கள், மதகுகள், பாதைகள், புகையிரத பாதைகள் உள்ளிட்ட அழிக்கப்பட்ட அனைத்தும் மீள கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இலங்கை இப்பொழுது 8% அபிவிருத்தி வேகத்தைப் பேணிச் செல்கின்றது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவ்வபிவிருத்தி வேகத்தைப் பேணக்கூடியதாக இருந்துள்ளது. வடக்கில்அபிவிருத்தி வேகம் 22% ஆக இருப்பதிலிருந்து நாம் வடக்கில் எவ்வளவு வேலைகளைச் செய்திருக்கிறோம் என்பது தெரிகிறது.

குறிப்பாக எமது முன்னேற்றப் பயணத்தை திரிபுபடுத்துகின்ற சமுதாயமே இன்று இருக்கிறது. ஒரு நிறுவனம் 8 இணையத்தளங்களை நிர்வகிக்கின்றது. இவை நாட்டுக்கு எதிராக சேறு பூசும் வேலைகளைத்தான் செய்கின்றன. வெளிநாட்டவர்கள் இலங்கையைப்பற்றிய செய்திகளைப் பெற்றுக்கொள்வதற்கு இவ்விணையத்தளங்கள்தான் இருக்கின்றன. இவற்றின் ஊடாக இலங்கையைப்பற்றி தவறான படத்தை சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.

நீங்கள் அவ்வளவு தூரத்தில் இல்லை. சிலர் இலங்கைக்கு வந்து இலங்கையில் சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கை தொடர்பிலான அவர்களுடைய அனுபவங்களை எடுத்துக் காட்டுவதுபற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்.

எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமது தாய்நாட்டை நேசிக்க வேண்டும். நீங்கள் எங்கே வாழ்ந்தா லும் உங்களுக்கான அரசாங்கத்தின் கடமைகளை நாம் நிறைவேற்ற தயாராக இருக்கின்றோம். இந்த நாடு எப்படி அபிவிருத்தியடைந்திருக்கிறது என்பதை பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வந்தபோது காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நாட்டின் அபிவிருத்தியைப் பார்க்கின்றபோது 30 வருட யுத்தத்தால் நாம் எவ்வளவு பின்னடைந்துள்ளோம் என்பது தெரிகிறது. எமது தாய்நாட்டை முன்னேற்றுவதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.

உங்கள் பிள்ளைகள் நாட்டுக்கு வந்து இது எனது தாயின் தாய்நாடு, இது எனது தந்தையின் தாய்நாடு என்று கூறி பெருமைப்படக்கூடிய நாடொன்றை உருவாக்குவதே எமது நோக்கமாகும். எமது பொறுப்பும் இலக்கும் அதுவாகும். அதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன.

இங்குள்ள வர்த்தகர்களை நமது நாட்டுக்கு அழைத்துவந்து நமது நாட்டில் அபிவிருத்திக்காக திறக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய பல்வேறு கைத்தொழில்களில் முதலீடு செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். சில நேரங்களில் இருக்கின்ற சட்டதிட்டங்கள் அபிவிருத்திக்கு இடை யூறாக இருக்கின்றன. வர்த்தகர்களுக்கு இடையூராக இருக்கின்றன.

அரசாங்கம் அத்தகைய சட்டதிட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. அவ்வாறு தளர்த்துவதன்மூலம் வர்த் தகர்களுக்கு இலங்கையை முதன் மையாகக்கொண்டு தொழில்முயற்சிகளையும் கைத்தொழில்களையும் ,விuபிக்க முடியும் என நம்புகிறேன்.

குறிப்பாக தமது நாட்டின் அபிவிருத்திக்கும் அதேபோன்று நாட்டுக்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் செய்யக்கூடிய சேவையை தயங்காது நிறைவேற்ற வாருங்கள் என நான் உங்களை அழைக்கின்றேன். ஒரு சிலர் நாட்டைப்பற்றி செய்கின்ற பொய்யான பிரசாரத்தை நம்பாமல் நாட்டின் உண்மையான நிலைமையை நாட்டுக்கு வந்து பாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் பெருமிதமடையக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்ப நாம் நடவடிக்கை எடுக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்தி உங்கள் அனைவருக்கும் நல்லதோர் எதிர்காலம் கிட்டுக என பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment