Wednesday, May 30, 2012

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது!

Wednesday,May,30,2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அர்த்தபூர்மாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, மனித உரிமை கண்காணிப்பகம் அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கு அனுப்பி வைத்துள்ள இரகசிய கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்மானங்கள் உரிய முறையில் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பதனை அமெரிக்கா கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் தீர்மானங்களை நிறைவேற்றாது, இழுத்தடித்துக் கொண்டிருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்க தயாராக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் சார்பில் அந்த அமைப்பின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் நான்கு பக்க இரகசிய கடிதமொன்றை, அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தீர்மானங்கள் நிறைவேற்றப்படாவிட்டால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் சில மனித உரிமை அமைப்புக்கள், தீர்மானத்திற்கு ஆதரவாக செயற்பட்ட இலங்கைப் பிரஜைகள் உள்ளிட்ட பலருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைப் பேரவை தீர்மானங்களை அமுல்படுத்துவதில் இலங்கை முழு ஈடுபாட்டைக் காட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புக்களும், ஊடகங்களும் தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இணைய தள ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்டுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கைத் தமிழர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பான மருத்துவ சான்றிதழ் ஆதாரங்களுடன் தகவல்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு இலங்கையை அமெரிக்க வலியுறுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கடத்தல்கள், காணாமல் போதல்கள், சட்டவிரோத படுகொலைகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு, அவர் அமெரிக்காவிடம்
கோரியுள்ளார்.

No comments:

Post a Comment