Monday, April 30, 2012

5ல் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த முதல்வர்கள் மாநாடு: டெல்லி செல்லும் ஜெயலலிதா!

Monday, April, 30, 2012
புதுடெல்லி::தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்த முதல்வர்கள் மாநாடு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வரும் 5ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.

நாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இந்த மையம் அமைப்பது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பது போன்றாகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். முதல்வர்களின் எதிர்ப்பால் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசு இது குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவித்தது.

கடந்த 16ம் தேதி டெல்லியில் நடந்த உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்வர்கள் மாநாட்டில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து ஆலோசிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இந்த விவகாரம் குறித்து தனியாக ஒரு மாநாட்டைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று வரும் 5ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மாநில முதல்வர்கள் மாநாட்டை மத்திய அரசு கூட்டியுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா வரும் 4ம் தேதி மாலை அல்லது 5ம் தேதி காலையில் டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்துகொள்கிறார்கள்.

கடந்த 16ம் தேதி டெல்லி சென்ற ஜெயலலிதாவை தமிழ்நாடு இல்லத்தில் வைத்து குஜராத் முதல்வர் மோடி, ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்நிலையில் வரும் 5ம் தேதியும் மோடி உள்பட சில மாநில முதல்வர்கள் ஜெயலலிதாவை சந்தித்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment