Saturday, March 31, 2012

பியாந்த்சிங் கொலையாளி கருணை மனுவை ஏற்க மறுப்பு!

Saturday, March, 31, 2012
புதுடெல்லி::பியாந்த்சிங் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள பல்வந்த்சிங் ரஜோவ்னாவுக்கு கருணா காட்டக்கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலை வழக்கில் பல்வந்த்சிங் ரஜோவ்னா என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர் தற்போது பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை இன்று தூக்கில்போட சண்டிகார் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ரஜோவ்னாவை தூக்கில் போடக்கூடாது என்று பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நிறைவேற்றப்படுவதாக இருந்த இவரது தூக்குத் தண்டனையை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் அனுப்பிய கருணை மனுவை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ரஜோனா சார்பில் அபினவ் ராமகிருஷ்ணா என்பவர் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த கருணை மனுவை பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும், ரஜோவ்னா சார்பில் மற்றொருவர் தாக்கல் செய்த கருணை மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதேபோன்ற ஒரு கருணை மனுவை தாக்கல் செய்த தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு தங்களது கருணை மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

No comments:

Post a Comment