Saturday, March 24, 2012இலங்கை::எந்தவொரு நாட்டிற்கும் எவ்வித காரணங்களின் அடிப்படையிலும் இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க இடமளிக்கப்பட மாட்டாது என பதில் வெளிவிவகார அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டமை குறித்து விசேட உரையொன்றை ஆற்றியபோதே அமைச்சர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
பிரேரணைக்கு எதிராக வாக்களித்த மற்றும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத அனைத்து நாடுகளுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்று ரீதியிலான சந்தர்ப்பத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுணர்வுடன் செயற்படுவார்கள் என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச சமூகத்தின் உதவியை இலங்கை தொடர்ந்தும் எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜெனீவா பிரேரணையின்போது இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அந்த நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளில் பாதிப்பு ஏற்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நாடுகளுடனான நட்புறவை தொடர்ந்தும் பேணுவதற்குரிய கதவுகள் திறந்தே காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதம் புரையோடிப்போய் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நாடு மீண்டும் அந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பதில் வெளிவிவகார அமைச்சர் டியூ குணசேககர தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment