Thursday, March 1, 2012

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!

Thursday, March 01, 2012
Washington::ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு வெளிநாட்டு அரச தலைவர் என்பதால் அவருக்கு சிறப்பு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாக ஒபாமா நிர்வாகம் கூறியுள்ளதை அடுத்து, தான் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டியுள்ளதாக அமெரிக்க மாவட்ட நீதிபதி Colleen Kollar-Kotelly அறிவித்தார்.

இதுதொடர்பாக தனது தீர்ப்பில் அவர், “ நீதிமன்றம் இந்த முடிவை சாதாரணமாக எடுக்க முடியாது. வாதிகளின் முறைப்பாடுகள் அமெரிக்க மற்றும் அனைத்துலக சட்டங்களுக்கு முரணான வகையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்த அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகளை கொண்டுள்ளது.

இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுவதானது, வாதிகளின் குற்றச்சாட்டுகள் அல்லது பிரதிவாதிகளின் தற்காப்பை பிரதிபலிக்கும் வகையில் அமையாது.

மாறாக, இரண்டு நூற்றாண்டுகளாக உள்ள சட்டங்கள், அடிப்படை அரசியலமைப்பு மற்றும் சட்டக்கொள்கைள் என்பன, வாதியின் இந்த முறைப்பாட்டை இந்த நீதிமன்றம் தொடர்ந்து விசாரிப்பதைத் தடுக்கிறது.“ என்று கூறியுள்ளார்.

‘எந்தவொரு தனிநபரும்‘ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், மற்றும் தவறான மரணங்களுக்கு எதிராக இழப்பீடு கோர முடியும் என்று 1992ம் ஆண்டு அமெரிக்க காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட சித்திரவதைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டது.

‘எந்தவொரு தனிநபரும்‘ என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் அரச தலைவராக இருந்தாலும், மகிந்த ராஜபக்சவுக்கு இராஜதந்திர விலக்குரிமை பொருந்தாது என்று வாதிகளின் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், அதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள நீதிபதி Kollar-Kotelly, “அரசதலைவர்களுக்கு விலக்குரிமை உள்ளதாக இராஜாங்கத் திணைக்களம் பிரகடனம் செய்தால்,அதை ஏற்கலாம் என்று காங்கிரசின் ஆவணங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது“ என்று கூறியுள்ளார்.

“இந்த நீதிமன்றம் இந்த வழக்கு விடயத்தில் நிறைவேற்று அதிகாரம் குறித்த இரண்டாவது ஊகத்தை செய்யும் நிலையில் இல்லை. நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை, பணியில் உள்ள இலங்கை ஜனாதிபதிக்கு விலக்குரிமை வழங்க விரும்புகிறது“ என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment