Thursday, February 02, 2012மும்பை::சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சிங்கப்பூர் தூதரகத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே. இவர் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாராமதி தொகுதியில் நின்று எம்பியாக வெற்றி பெற்றார். இந்நிலையில் இவர் சிங்கப்பூர் குடிமகள் என்றும் அந்த நாட்டில் அவருக்கு சொத்துகள் இருப்பதாகவும் மிருனாளினி ககாடே என்பவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். வேறு நாட்டில் குடியுரிமை பெற்ற ஒருவர் இந்திய தேர்தலில் போட்டியிட்டது தவறு என்றும் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜே.எச்.பாட்டியா நேற்று விசாரித்தார். சுப்ரியா சுலேவுக்கு சிங்கப்பூர் குடியுரிமை இருக்கிறதா என்பது குறித்து மும்பையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் வரும் 14ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரை கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வக்கீல் முன்வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார். சுப்ரியா சுலே தொடர்பான ஆவணங்களை தூதரக அதிகாரிகள் சமர்ப்பித்தால் போதும் என உத்தரவிட்டார்.
சிங்கப்பூர் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டை சுப்ரியா மறுத்துள்ளார். தனது கணவருக்கு சிங்கப்பூரில் தொழில் இருப்பது உண்மைதான். ஆனால் தான் இந்தியக் குடிமகள் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment